சீமானை 'அவன்’னு சொன்னதால தம்பிங்க வறுத்தெடுத்துட்டாங்க.. ‘ஒரு ஃப்ளோவுல’.. இளவரசு சொன்ன தகவல்!
சென்னை : நண்பன் என்ற முறையில் சீமானை ஒருமையில் பேசியதால் அவரது தம்பிகள், தன்னை கடுமையாக வசைபாடியதாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு பேசியுள்ளார்.
பேச்சாளரும், தமிழ் அறிஞருமான நெல்லை கண்ணன் சமீபத்தில் காலமானார். இந்நிலையில், நெல்லை கண்ணனுக்கு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில், நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு, இயக்குனர் சுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது பேசிய நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு, சீமான் உடனான தனது நட்பைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு .. பெருங்கொடுமை, சகிக்க முடியாதது, மோசடித்தனம்,.. சீமான்
36 ஆண்டு கால நட்பு
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் இளவரசு, "சீமானும் நானும் முதன்முதலில் சந்தித்து கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் ஆகிறது. இந்த 36 ஆண்டுகளில் எல்லாமும் கடந்து இன்னும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம். 35 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜாவின்‘என் உயிர்த் தோழன்'படம் பார்த்துவிட்டு வந்த நானும் சீமானும் சினிமா பற்றி பேசிக் கொண்டோம். எதிர்காலம் பற்றியும் திட்டமிட்டோம். காலம் பல்வேறு விதமான ஆச்சரியங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது. அந்தவகையில் இன்று தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவராக இருக்கிறார் சீமான்.
'டா' சொல்லி பேசிவிட்டேன்
சீமானைப் பற்றி ஒரு நேர்காணலில் பேசிய போது, ‘சீமான் கதை சொன்னான்' என்று கூறிவிட்டேன். உடனே அவரது தம்பிகள் கமென்ட்களில் வந்து கொந்தளித்து விட்டனர். ‘உனக்கு அவர் நண்பராக இருக்கலாம்.. நீ தனியா இருக்கும் போது என்ன வேணாலும் சொல்லி கூப்பிடு.. வெளியில் பேசும் போது மரியாதையாக பேசு.. டா போட்டு பேசுன..' என என்னை வறுத்தெடுத்து விட்டனர். அப்படி வேண்டுமென்றே கூறவில்லை. ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டது.
அவன் இவன்
ஃப்ளோவில் வருவதையெல்லாம் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இன்று வரை தனிப்பட்ட முறையில் பேசும்போது அப்படித்தான் பேசிக்கொள்வோம். அதனால்தான் இந்த மேடையில் பேசும் போது கூட, என்னை அறியாமல் அவன் இவன் என வந்துவிடும் என்று ரொம்ப யோசித்து யோசித்து, அவர் இவர் என்று சீமானை குறிப்பிடுகிறேன்." என்றார். தொடர்ந்து இளவரசுவின் நகைச்சுவையான பேச்சால், அரங்கமே சிரிப்பலையில் ஆழ்ந்தது.
ஒளிப்பதிவாளர்
நடிகர் இளவரசு, முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானது ஒளிப்பதிவாளராகத்தான். 80, 90களில் வெளிவந்த கருத்தம்மா, பாஞ்சாலங்குறிச்சி, பெரிய தம்பி, இனியவளே என பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் இளவரசு. மனம் விரும்புதே உன்னை படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பெற்றுள்ளார்.
குணச்சித்திர வேடம்
1985-ல் வெளியான பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் வந்த இளவரசு, தொடர்ந்து இதய கோயில், கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, சந்தன காற்று உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படியே தொடர்ந்து நடித்த அவர், தனது தனி பாணி கவுண்டர்களாலும், வட்டார வழக்கு பேச்சாலும், பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.
எம்.எல்.ஏ மகன்
இளவரசுவின் தந்தை மலைச்சாமி, திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர். திமுக முதன் முதலில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த காலகட்டமான 1967 முதல் 1971 வரை திமுக சார்பாக மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ-வாக இருந்தவர் ச.பெ.மலைச்சாமி. அவரது இரண்டாவது மகன் தான் இளவரசு என்பது குறிப்பிடத்தக்கது.