“டேய் பைத்தியம்”.. மனைவியின் தம்பிக்கு நாம் தமிழர் சீட்! செய்தியாளரை கடும் கோபத்தில் திட்டிய சீமான்
சென்னை: நாம் தமிழர் கட்சியில் மைத்துனருக்கு சீட் கொடுத்தது பற்றியும், சவுக்கு சங்கர் பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளரை பைத்தியம் என்றும், செய்தியாளர் சந்திப்பு வர வேண்டாம் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், "திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் ஈழத் தமிழர்கள் இங்கே இருந்துகொண்டு இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துகிறார்கள்.
இங்கே இருக்கும் தமிழ் தேசியவாதிகள் ஆதாயத்திற்காக வாய்திறக்க மறுக்கிறார்கள் என்று சவுக்கு சங்கர் குற்றச்சாட்டை வைத்து உள்ளார்." என கேள்வி எழுப்பினார்.
சாதி தமிழில்ல.. “குடி”ன்னு சொல்லுங்க! இடஒதுக்கீடு வேண்டாம்.. புதிய பெயரை சொல்லிய சீமான்
வெறுப்பாகுமா இல்லையா?
இதற்கு பதிலளித்த சீமான், "அது அவருடைய கருத்து. குஜராத்தில் அதானி துறைமுகத்தில் 20,000 கோடிக்கு ஹெராயின் வந்தது. அதை யாருமே பேசவில்லை. ஒரு தடுப்பு காவலில் வைத்துள்ளவர்கள் எப்படி கடத்த முடியும். அதை கண்காணிப்பது உங்கள் வேலை. நடப்பது திராவிடர் ஆட்சி. போதைப்பொருள் கடத்தலில் தமிழ்தேசியவாதிகள் ஆதாயத்துக்கு பேசுகிறார்கள் என்றால்.. வெறுப்பாகுமா இல்லையா?" என்று கேட்டார்.
சவுக்கு சங்கர் பற்றி கேள்வி
இதை சவுக்கு சங்கர் சொல்லி இருக்கிறாரே என்று செய்தியாளர் சொன்னவுடன், "உனக்கும் சவுக்கு சங்கருக்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறது. நீ அதனால் அவரை பற்றி பேசுகிறாய். அது சவுக்கு சங்கரின் கருத்து. அதை நான் ஏற்கிறேனா? ஆட்சியில் இருப்பவர்கள் யார்? யார் என்ன பேசினாலும் ஒட்டு கேட்கிறீர்கள். இதை கண்காணிக்காமல் என்ன செய்கிறீகள்? போதைப்பொருள் கடத்தினால் நடவடிக்கை எடு" என்றார்.
பதிலளிக்க மறுத்த சீமான்
உடனே அந்த செய்தியாளர், "தமிழக அரசும் இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக உள்ளது என்பதும்தான் அந்த குற்றச்சாட்டு." என்று கேட்க சீமான், விடுப்பா வேறு ஏதாவது கேளுங்க என்றார். அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டதை சுட்டிக்காட்டி வாரிசு அரசியல் விமர்சனத்தை முன்வைத்து சீமான் பேசினார்.
பைத்தியக்காரன் என்று திட்டிய சீமான்
அவரிடம் அதே செய்தியாளர், "நீங்களும் உங்களுடைய உறவினர் அருண்மொழிக்கு சீட் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது." என்று கூற அதற்கு பதிலளிக்காத சீமான், செய்தியாளரை நோக்கி "அவனுக்கு ஒரு பிரச்சனை. நீ ஒரு நல்ல மனநல மருத்துவரை பாருடா டேய். பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காதே. திமுக, அதிமுகவில் சீட்டு கொடுத்ததால்தான் அவன் வாரிசு." என்று காட்டமாக பதிலளித்தார்.
மாமா மகனுக்கு சீட்
அவரிடம் செய்தியாளர், "கருத்து சுதந்திரம் பேசுகிறீர்கள். கேள்வி கேட்டால் பைத்தியகாரன் என்கிறீர்கள்." என்று சொல்ல, சீமான் "உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. எந்த கேள்வியையும் சரியாக கேட்பது இல்லை. மற்றவர்களையும் கேட்க விடுவது இல்லை. யோ! ஏதாவது பேசிக்கொண்டு இருக்காதே. எங்க மாமா திமுக, அதிமுகவில் இருந்தார். அவரது மகனுக்கு சீட் கொடுத்தோம். அவன் என்ன என்னுடைய வாரிசா? எதாவது பேசிக்கொண்டு இருக்காதே.." என்று மீண்டும் கோபமாக சீமான் பதிலளித்தார்.
செய்தியாளர் சந்திப்புக்கு வராதே
"ஏன் மரியாதை குறைவாக பேசுகிறீர்கள்?" என்று கேட்ட செய்தியாளரிடம், "ஏய்.. நீ எந்த கேள்வியும் உருப்படியாக கேட்கவில்லை. நீ இனி வராதே. என்னை சந்திக்காதே. அன்றிலிருந்து பார்க்கிறேன். உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. தேவையில்லாத கேள்விகளை கேட்கிறாய்." என்று ஆவேசமாக ஒருமையில் பதிலளித்தார். சீமானின் இந்த பேச்சால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டு இருக்கிறது.