பொதுக் கூட்டங்கள் நடத்துவதில் செங்கோட்டையன் ஸ்பெஷலிஸ்ட்.. ஜெயலலிதாவே வியந்தவர்.. விஜய்க்கு நிம்மதி
சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். 77 வயதாகும் செங்கோட்டையன் அதிமுகவுக்காக 50 ஆண்டுகள் களத்தில் செயல்பட்டவர். தவெகவில் சீனியர் தலைவர்கள் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்ட சூழலில், செங்கோட்டையன் முக்கிய பொறுப்பில் அமர்ந்திருப்பது அக்கட்சியின் பலத்தை அதிகரித்துள்ளது.
அதேபோல் தவெகவின் மேற்கு மாவட்டங்களின் முகமாகவும் செங்கோட்டையன் மாறி இருக்கிறார். தவெக மேற்கு மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானோ இளைஞர்களாக இருந்த சூழலில், செங்கோட்டையன் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. இவற்றை விடவும் செங்கோட்டையனால் தவெகவுக்கு கிடைக்கும் பெரிய பலம் என்னவென்றால் விஜய்யின் பிரச்சாரத்தை வடிவமைப்பது தான்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், விஜய் இன்னும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு பயணிக்கவே இல்லை. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்பாக சொன்னதை போல், விஜய்யை அழைத்து வந்து, மீண்டும் அழைத்து செல்வதே தவெகவின் தலையாய பிரச்சனையாக உள்ளது.
ஏனென்றால் விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு, திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் செய்யப்பட்ட சுற்றுப்பயணம் என்று அத்தனையும் சொதப்பலாகவே முடிந்தன. அதன் உச்சமாக கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இருந்து தவெகவினரால் இன்னும் முழுமையாக வெளி வர முடியவில்லை.
அதேபோல் ஒரு மாவட்டத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே விஜய் பேசி வருகிறார். எங்கு தொடங்கி, எங்கு பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்பதே தவெகவினரால் இன்னும் கண்டறிய முடியவில்லை. இன்னொரு விஷயம் என்னவென்றால், விஜய் சுற்றுப்பயணம் தொடங்கிய போது அட்டவணையே 2 முறை மாற்றி அமைக்கப்பட்டது.
உச்ச நடிகரான விஜய்யை பார்க்க மக்கள் வருவார்கள் என்பதோடு, அனைத்து பகுதிகளுக்கும் விஜய் சென்று வாக்கு கேட்டால் மட்டுமே தவெகவால் தேர்தலில் வெற்றி பெற முடியும். அப்படி எளிதாக அனைத்து பகுதிகளுக்கு சென்று மக்களை விஜய் சந்திக்கும் வகையில் பிரச்சார திட்டத்தை உருவாக்க வேண்டும். அதில் தான் செங்கோட்டையன் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லலாம்.
அதிமுகவில் பிரச்சாரத் திட்டத்தை வடிவமைப்பில் செங்கோட்டையனுக்கு நிகராக யாருமே இருந்ததில்லை என்று சொல்லலாம். ஏனென்றால் 2001 முதல் 2006 வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் செங்கோட்டையன் ஓரம்கட்டப்பட்டிருந்தார். இதனிடையே 2004 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அப்போது ஜெயலலிதாவின் பிரச்சார சுற்றுப்பயணத்தை வேறொரு நபர் வடிவமைத்திருந்தார்.
ஆனால் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதாவின் வாகனம் புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் மீண்டும் 2 நாட்கள் வந்து நின்றது. இதனால் டென்ஷனான ஜெயலலிதா, பிரச்சார பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். உடனடியாக செங்கோட்டையன் அழைக்கப்பட்டார். ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை வடிவமைக்கும் பணி அவரிடம் அளிக்கப்பட்டது.
அடுத்த 2 நாட்களில் ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கினார். அதுதான் செங்கோட்டையன். கிட்டத்தட்ட ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் இருந்த அளவிற்கு Charishma விஜய்யிடம் இல்லையென்றாலும், விஜய் உச்ச நடிகராக இருக்கிறார். தவெகவுக்கு வாக்களிக்கிறார்களோ இல்லையோ, பலரும் விஜய்யை பார்க்கவே கூடுவார்கள்.
இதனால் கரூர் சம்பவம் போல் மீண்டும் ஒரு சிறிய தவறு நடந்தாலும், விஜய்யின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறி தான். இப்படியான நேரத்தில் தவெகவுக்கு செங்கோட்டையன் வந்திருப்பது மிகப்பெரிய ஜாக்பாட். அதேபோல் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்க தயாராகிவிட்ட போது, அவரின் ஜூனியர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று பார்க்கப்படுகிறது.
இதனால் செங்கோட்டையனை சுதந்திரமாக செயல்பட விஜய் அனுமதித்தால், தவெக அடுத்தடுத்த உச்சங்களை வேகமாக எட்ட முடியும். அதேபோல் தவெகவினர் ஊடகங்களில் தோன்றி பேட்டியளிப்பதே அதிசயமாக இருக்கும் சூழலில், செங்கோட்டையன் போன்ற மக்களுக்கு பழக்கப்பட்ட முகம் தவெக தொடர்பாக பேசிக் கொண்டே இருப்பது அக்கட்சி மீது மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையை விதைக்கும் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications