ஜெயிச்சுட்டோம் மாறா மோடில் கனிமொழி.. யாருக்காகவோ முகத்தை திருப்பிய திமுக சீனியர்கள்! இதுதான் காரணமோ?
சென்னை: திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். கர்ஜனை மொழி கனிமொழி என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பாராட்டிய போதும் திமுக சீனியர்கள் ஒருவித இறுக்கத்துடன் கனிமொழியுடன் மேடையில் இருந்தது ஏன் என்பதுதான் அக்கட்சியில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் சுப்பு அக்கா என்ற சுப்பக்கா என்ற சுப்புலட்சுமி ஜெகதீசன். ஈழத் தமிழர் விவகாரத்தில் தடா சட்டத்தை எதிர்கொண்டவர். பெரியார் கொள்கைப் பற்றார். கடந்த சட்டசபை தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெல்வார்; தமிழ்நாட்டின் முதலாவது பெண் சபாநாயகர் என்ற பெருமையப் பெறுவார் என்ற எதிர்பார்ப்புகள் வீணாகிப் போனது. பல்வேறு காரணங்களால் சொற்ப வாக்குகளில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்றுப் போனார். இந்த தேர்தல் தோல்வியில் எழுந்த பிரச்சனைகளால் தீவிர அரசியலைவிட்டே விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார் அவர். இதனை திமுக தலைமையும் ஏற்றுக் கொண்டது.
சாயம் போகாத கட்சி திமுக.. ஜெயக்குமார் தெரிந்துகொள்ள வேண்டும்.. அமைச்சர் கேஎன் நேரு பதிலடி!
திமுக துணை பொதுச்செயலாளர்
இதனால் திமுகவின் புதிய துணைப் பொதுச்செயலாளர்- மகளிர் கோட்டா யாருக்கு என்பதில் தீவிரமான விவாதங்கள் நடந்தன. சுப்புலட்சுமி ஜெகதீசன் இல்லாத இடத்தில் கனிமொழி எம்.பி.தான் முதல் சாய்ஸ் என்பது பொது கருத்தாகவே இருந்து வந்தது. ஆனாலும் திமுகவின் தலைமை பதவிகளில் கனிமொழி அமரவைக்கப்படுவாரா? என்ற கேள்வியும் தொக்கி நின்றது. இதனால் கனிமொழிக்கு அடுத்த நிலையில் உள்ள பலரது பெயர்களும் உருண்டு வந்தன.
கர்ஜனை மொழி கனிமொழி
இத்தனை யூகங்களுக்கும் முடிவு கட்டும் வகையில், திமுகவின் புதிய துணைப் பொதுச்செயலாளராக கர்ஜனை மொழி கனிமொழி நியமிக்கப்படுவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று திமுக பொதுக்குழுவில் அறிவித்தார். இந்த அறிவிப்பை மகளிர் அணியினர், பொதுக்குழு கூட்டத்திலேயே வரவேற்று முழக்கம் எழுப்பினர். பொதுக்குழுவில் ஒரு பகுதியில் இருந்து சன்னமான குரலில் கைதட்டல்கள் வந்தன. ஆனால் அப்பாடா சாதித்துவிட்டோம்.. ஜெயிச்சுட்டோம் மாறா என அகமகிழ்வோடு இருக்கையில் இருந்து எழுந்து மேடையேறினார் கனிமொழி. செல்வி அக்கா கணவர் மாமா முரசொலி செல்வத்தின் காலில் விழுந்தும் வணங்கினார் கனிமொழி.
பாராமுகம் காட்டிய சீனியர்கள்
மேடைக்குப் போன கனிமொழி, மகிழ்வின் உச்சத்தில் இருந்து மீளாதவராகவே விம்மும் புன்னகையுடனேயே அமர்ந்திருந்தார். பின்னர் ஏற்புரையாற்ற கனிமொழி அழைக்கப்பட்டார். அப்போது மேடையில் இருந்த துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு சால்வை கொடுத்தார். கனிமொழி சால்வை கொடுத்த போது துரைமுருகன் எந்த ஒரு ரியாக்சனும் காட்டாமல் இருந்தார். மேடையில் இருந்த இதர தலைமை கழக நிர்வாகிகள் கூட கனிமொழியின் புரமோஷன் மீது எந்த ரியாக்ஷனும் காட்டாமலேயே இருந்தனர். கனிமொழி போராடி இந்த இடத்தை பிடித்திருக்கும் நிலையில் சீனியர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பது பலரது கேள்வியாக இருந்தது.
காரணமே இதுதானாம்..
இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலும் சரி தற்போது முதல்வர் ஸ்டாலின் காலத்திலும் சரி உட்கட்சி விவகாரங்களில் தலையிட்டு தம்மால் நெருக்கடி வந்துவிடக் கூடாது என்பதில் தொடக்கம் முதலே கவனமாக இருப்பவர் கனிமொழி. ராஜ்யசபா எம்.பி.யாகவே காலத்தை ஓட்டுகிற சாத்தியங்கள் இருந்தாலும் பழிசொல்லும் விமர்சனங்களும் நெருக்கடி தந்துவிடக் கூடாது என்பதற்காக லோக்சபா தேர்தல் களத்தை எதிர்கொண்டார்; இயல்பாகவே கட்சியில் தமக்கு எந்த இடம் கிடைக்கும் என்பதை யூகிக்காதவரும் அல்ல. ஆனாலும் கனிமொழிக்கான புரமோஷன் சிலரது எதிர்கால புரமோஷன்களுக்கு இடையூறாக இருக்கலாம் என்கிற முட்டுக்கட்டைகளை திமுகவின் மூத்தவர்கள் அறியாததும் அல்ல. அந்த முட்டுக்கட்டைகளின் அதிருப்தியை ஏன் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே என்னதான் உள்ளூர மகிழ்ந்தாலும் மேடையில் சீனியர்கள் அதை வெளிக்காட்டாமல் இருந்திருக்கலாம் என்கின்றனர் அக்கட்சி சீனியர்கள்.