கொடநாடு வழக்கில் அதிர்ச்சி.. குலைநடுங்க வைக்கும் தகவல்.. சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்!
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் கனகராஜ் காா் விபத்தில் உயிரிழந்தாா். சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.

சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கை தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட விசாரணை விவரங்கள், வாக்குமூல விவரங்களை தனிப்படையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதன் அறிக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

ஷகில் அக்தர் ஆய்வு
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கொடநாடு எஸ்டேட்டில் நேரடியாக விசாரணையில் ஈடுபட்ட நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பின்னரும் கொடநாடு எஸ்டேட் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமல்லாமல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொடநாடு பங்களாவில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி ஷகில் அக்தர் மற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் அங்கு பணிபுரியும் பலரிடம் விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதியன்று கொடநாடு பங்களாவிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் 10ம் கேட்டில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தனர். இதுகுறித்து விசாரணையில் இரவு காவலாளி ஓம் பகதூரை தலை கீழாக கட்டிவைத்த மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டி அகற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எஸ்டேட் நிர்வாகம்
அதற்குப் பதிலாக புதிய மரக்கன்றை அதே இடத்தில் நட்டு எஸ்டேட் நிர்வாகத்திடன் வளர்த்து வந்துள்ளனர். இதனால் வழக்கு விசாரணை நிறைவடையாத நிலையில் எஸ்டேட் நிர்வாகம் மரத்தை வெட்டியது ஏன் என்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications