"திருப்பரங்குன்றம் மலை மேல நின்னு.." பெண் அடுத்து சொன்ன வார்த்தை.. சட்டென முதல்வர் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: தமிழ்நாட்டில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஒருவர் தனக்குத் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் எப்படி உதவியது என்பதைப் பகிர்ந்து கொண்டார். அப்போது திருப்பரங்குன்றம் மலை மேலே ஏறி நின்று, ஜெயித்துவிட்டேன் என கத்திவிட்டு வருவதாக அந்தப் பெண் சொன்ன நிலையில், அதைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழகத்தில் முதற்கட்டமாகச் சுமார் 1.13 கோடி பெண்களுக்கு ரூ 1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக உரிமைத் தொகை வரவு வைக்கப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில், அதன் விரிவாக்க நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

உரிமைத் தொகை
இரண்டாம் கட்டமாக 16.94 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெண்களுக்கு உரிமைத் தொகை அட்டையை வழங்கினார். அவர்களுக்கும் இனி உரிமைத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் இத்திட்டத்தில் பலன் அடையும் பெண்களின் எண்ணிக்கை உயர்கிறது.
வெல்லும் தமிழ்ப் பெண்கள்
உரிமைத் தொகை விரிவாக்க நிகழ்ச்சி உடன் சேர்ந்து வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் பலன் பெற்ற பெண்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். அங்கு மதுரையில் வசிக்கும் சரண்யா என்ற பெண், வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி மூலம் தனக்கு வேலை கிடைத்ததாகக் குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் மலை மேலே ஏறி, நான் ஜெயிச்சுட்டேன் எனக் கத்திவிட்டு வந்ததாக அவர் சொல்லவே.. அதைக் கேட்டவுடன் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி கைதட்டி மகிழ்ந்தனர்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "நான் வீட்டிற்குள்ளேயே வளர்ந்த பெண். பிறந்து வளர்ந்தது எல்லாமே தேனியில் தான்.. வீட்டிற்கு உள்ளேயே இருப்பேன்.. எல்லாத்துக்குமே அப்பா, தம்பி என அவர்களையே எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். எனக்குச் சும்மா சிறிய ரூம், ஒரு புத்தகம் இருந்தாலே போதும்.. நான் அப்படித் தான் வளர்ந்தேன்.
சென்னைக்கு வருவது முதல்முறை
திருமணத்திற்குப் பிறகு மதுரை வந்தேன். கல்யாணத்திற்குப் பிறகும் கணவரையே நம்பி இருக்க ஆரம்பித்தேன். எனது வீட்டிற்குப் பக்கத்தில் இருப்போர் தான் தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் மூலமாக நீயும் படி என்றார்கள். அங்கு தான் டெக்னீசியன் படிப்பை முடித்தேன். 98% ஸ்கோர் வாங்கினேன். முடித்த உடனேயே எனக்கு வேலை கிடைத்தது. இப்போது நாமக்கல் மாவட்டத்தில் வேலை செய்து வருகிறேன். இப்போது நான் யாரையும் எதிர்பார்ப்பது இல்லை.
சென்னைக்கு இது தான் எனது முதல் பயணம். சென்னைக்கு முதல் முறையாக வரேன். நானாக தனியாக வரேன். அப்பாவோ தம்பியோ கணவரோ கூட வரல. நான் தனியாக வருகிறேன். இப்போது எல்லாம் பிங்க் பஸ் மிஸ் பண்ணிட்டா கூட பரவாயில்லை நான் ஆட்டோல போறேன் என சொல்லும் அளவுக்கு இருக்கிறேன்.
திருப்பரங்குன்றம் மலை மேலே ஏறி
இப்போது எங்கள் ஊரில் ஆரம்பச் சுகாதார நிலையம் கூட பக்கத்திலேயே இருக்கிறது. அதுவும் எனக்குப் பெரியளவில் உதவியாக இருந்தது. மருத்துவர்கள் எல்லாம் அவ்வளவு அழகாக கவனிச்சாங்க. எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு டெலிவரியுமே அரசு மருத்துவமனையில் தான் நடந்தது. என்னை நான் பார்த்துக் கொள்வதை விட.. எனது கணவர் பார்த்துக் கொள்வதை விட அவர்கள் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்.
என்னை சென்னைக்குக் கூப்பிடும் போது கூட நான் திருப்பரங்குன்றம் மலை மேலே ஏறி நின்று, நான் ஜெயிச்சுட்டேன் முருகானு கத்திவிட்டு தான் வந்திருக்கிறேன்" என்றார். அவர் இப்படிச் சொன்னதை கேட்டவுடன் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி கைதட்டி மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications