அதிமுகவில் ஒற்றைத் தலைமை..சட்டப்படி கூடிய பொதுக்குழு..ஏற்றுக்கொண்ட ஹைகோர்ட் - வக்கீல் இன்பதுரை
சென்னை: ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான தடை நீங்கியுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த பொதுக்குழுவை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடுத்தார் ஓ.பன்னீர் செல்வம். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று.. வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரிக்கப்பட்டது.

ஹைகோர்ட்டில் அப்பீல்
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார். ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

டிவிசன் பெஞ்ச் விசாரணை
எடப்பாடி தரப்பு இந்த வழக்கில் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்தது. முதல் கோரிக்கை இந்த வழக்கில் மறுவிசாரணை. பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததற்கு எதிராக மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டன.உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

பொதுக்குழு செல்லும்
இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த தீர்ப்பளித்துள்ளனர்.

வக்கீல் இன்பதுரை
தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை, அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி அளித்த உத்தரவு உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்சினால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதன்படி ஒற்றைத்தலைமை என்ற அதிமுகவின் நோக்கமும் முன்னெடுப்புகளும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுதான் தொண்டர்களின் மனநிலையும் கூட. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு சட்டப்படி செல்லும் என்று டிவிசன் பெஞ்ச் வழங்கியுள்ளது.

சட்டப்படி நடைபெற்ற பொதுக்குழு
பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற வாதத்தை நாங்கள் முன் வைத்தோம். அந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக சட்ட விதிகளின் படிதான் இந்த பொதுக்குழு நடைபெற்றது என்ற வாதங்களையும் முன்வைத்தோம் அந்த வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் இன்பதுரை கூறினார்.












Click it and Unblock the Notifications