முரசொலி மாறனை போன்ற திறமையானவரை பார்ப்பது அரிது... சீத்தாராம் யெச்சூரி புகழாரம்
சென்னை: முரசொலி மாறனை போன்று ஒரு திறமையான நபரை இனி பார்ப்பது அரிதானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முரசொலி மாறனின் 87-வது பிறந்த தினம் என்பதால், அவருடன் நெருங்கிப் பழகி அரசியலில் பயணித்த தலைவர்களை சிறப்பழைப்பார்களாக கொண்டு நினைவரங்கம் நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் வைகோ, சீத்தாராம் யெச்சூரி, தேவகவுடா, ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதில் பேசிய சீத்தாராம் யெச்சூரி முரசொலி மாறனுடனான தனது நட்பை விவரித்தார்.முரசொலி மாறனை பொறுத்தவரை தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றும் நாட்டின் நலனுக்கான அவரது பங்களிப்பு அபரிமிதமானது எனவும் தெரிவித்தார். ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் தேசிய அரசியலில் முன்னணி இடத்தில் இருந்தவர் மாறன் எனக் குறிப்பிட்டார்.
முரசொலி மாறன் இப்போது தேவைப்படுகிறார்... அவரது முழக்கம் தேவைப்படுகிறது... வைகோ பேச்சு
முரசொலி மாறனை பொறுத்தவரை முடிவுகளை எடுப்பதில் துரிதமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்படக்கூடியவர் என்றும் நெருக்கடியான காலகட்டத்தில் சாதுர்யமான முடிவுகளை எடுப்பவராக இருந்தார் எனவும் குறிப்பிட்டார். மேலும், அவர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் தொழில் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த போது, தோஹா மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்காக மாற்றியமைத்த ஒப்பந்தமும் என்றும் அவரது புகழை நிலைத்திருக்கச் செய்யும் எனத் தெரிவித்தார்.