பருவமழை இந்த 5 மாவட்டங்களில் ஜில்லென மழை பெய்யும் - 4 மாநிலங்களில் 2 மாதத்திற்கு மழை அடி தூள்
தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென்மேற்குப் பருவக்காற்று வெப்பச்சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பருவமழை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி வருகின்றனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவு நேரங்களில் மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை, நீலகிரியில் 2 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களிலும் கன்னியாகுமரி,
புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வரும் 7,8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பிற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 9ஆம் தேதியன்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு
இதனிடையே மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஷிவ்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டுவந்தனர். மேலும், அங்குள்ள பல்வேறு கிராமங்களுக்கு மீட்புப் படையினர் சென்று அங்குள்ள மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம், பிரதமர் மோடி காணொலி மூலம் கேட்டறிந்தார். அப்போது பேசிய சிவராஜ் சிங் சவுகான், இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து பாதுகாப்பான அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமரிடம் மாநில முதல்வர் கூறியுள்ளார்.
இந்திய வானிலை மையம் கணிப்பு
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்துக்கு மாறாக இரண்டு நாள் தாமதமாக, ஜூன் 3ல் கேரளாவில் துவங்கியது. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் டில்லி தவிர, வட மாநிலங்களின் சில பகுதிகளிலும், கிழக்கு, மேற்கு, தென் மாநிலங்களிலும் ஜூன் 19 முதல் மழை பொழியத் துவங்கியது.
நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 3ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களிலும் பருவமழை கொட்டித்தீர்க்கிறது. கிழக்கு மேற்கு, தென் மாநிலங்களிலும் பருமழை தீவிரமடைந்துள்ளது. பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்த நிலையில் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் மழை பொலிவு குறித்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், லடாக், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் இந்த மாதம் வழக்கத்தை விட அதிக மழை பொலிவு இருக்கும்.
தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் கோவா, மத்திய மகாராஷ்டிரா, தெற்கு குஜராத், வடகிழக்கு மாநிலங்கள், பீகார் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கும்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை சராசரி அளவாகவே இருக்கும். தென்மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகள், மத்திய மாநிலங்களின் பகுதிகளில் சராசரிக்கும் சற்று அதிகமான அளவு மழை பொலிவு இருக்கும் என்று இந்திய வானிலை மைய இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மொஹாபத்ரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications