பழிக்குப்பழி கொலைகள்...சாட்டையை எடுத்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்.. போலீசாருக்கு எச்சரிக்கை ஆடியோ
தென்மாவட்டங்களில் சாதிய ரீதியான கொலைகள் நடைபெறுவதற்கு முன்பாக சிறப்பு குழுவிடம் இருந்து தகவல் வந்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறை உயர் அதிகாரிகளே பொறுப்பு ஆவார்கள் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஐபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை: பொறுப்பை உயரதிகாரிகள் தட்டிக்கழிக்க கூடாது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ள ஆடியோ காவல் துறையினரை கலங்க செய்துள்ளது.
Recommended Video
தென்மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் ஓபன் மைக் மூலமாக தென் மண்டல காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ தற்போது வைரலாக சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
தென்மாவட்டங்களில் சாதிய ரீதியான கொலைகள் நடைபெறுவதற்கு முன்பாக சிறப்பு குழுவிடம் இருந்து தகவல் வந்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறை உயர் அதிகாரிகளே பொறுப்பு ஆவார்கள். விசாரணையின் அடிப்படையில் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இனிமேல் தென்மாவட்டத்தில் ஜாதி ரீதியான மற்றும் பழிக்கு பழியான கொலைகள் நடக்கும் முன் தகவல் வந்து அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமாக என்ன இருக்கிறதோ அதன்படி சார்ஜ்ஷீட் போட வேண்டும். பொறுப்பை உயரதிகாரிகள் தட்டிக்கழிக்க கூடாது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நடவடிக்கை என்ன
தவறுகளை தடுக்காத அதிகாரிகள் முதலில் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள். அதன் பின்பு பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள். மூன்றாவதாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகளை தடுக்கும் பட்சத்தில் நீங்கள் கவுரவமாக பணியை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

சைபர் கிரைம்
நிறைய பேருக்கு சைபர் கிரைம் பற்றி தெரியவில்லை. விழிப்புணர்வே இல்லாமல் இருக்கிறார்கள். 1930 என்றால் யாருக்குமே தெரியவில்லை. சைபர் கிரைம் உதவி எண்கள் கூட தெரியாமல் இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் போன் செய்தால் நடவடிக்கை எடுக்க தெரியவேண்டும் என்று தென் மண்டல காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ தற்போது காவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

யார் இந்த அஸ்ரா கார்க்
அஸ்ரா கார்க் ஐபிஎஸ், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தவர். 2004ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆனார். 2011ஆம் ஆண்டு மதுரை எஸ்.பியாக பொறுப்பேற்றார். மகளிடம் தவறாக நடக்க முயற்சித்த கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்த உமாராணி என்பவரை சிறைக்கு அனுப்பாமல் ஜாமினில் விடுவித்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை அவரை பாராட்டியது.

பதவி உயர்வு
அதேபோல் மதுரை ஆஸ்டின்பட்டி பகுதியில் காதல் மனைவியை எரித்து கொன்ற வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்தவரை கைது செய்தார். அனாதையான அவரது 5 வயது மகளை, வெளிநாட்டில் இருந்து உறவினரை வரவழைத்து ஒப்படைத்து அரசின் பாராட்டை பெற்றார். நெல்லை எஸ்.பியாக இருந்ததோடு, திருப்பூர் எஸ்.பி., சென்னை நிர்வாக பிரிவு உதவி ஐ.ஜி., உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு பணிக்காக டெல்லி சென்றார். சிபிஐயில் பணியாற்றியபோதே டி.ஐ.ஜி., ஐ.ஜி., பதவி உயர்வு வழங்கப்பட்டது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு
தற்போது மத்திய அரசு பணியில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு தென் மண்டல ஐஜியாக திரும்பியுள்ளார், அஸ்ரா கார்க்,நேர்மையாக, பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பார் என்பதால் தென்மாவட்ட போலீசார், அதிகாரிகள் சிலர் கலக்கத்தில் இருந்தனர். அஸ்ரா கார்க் பெயரை குறிப்பிட்டு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என மீம்ஸ்களும் பரவியது. இந்த நிலையில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்கவும் பழிக்குப்பழி கொலைகளைத் தடுக்கவும் ஆடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார் அஸ்ரா கார்க்.












Click it and Unblock the Notifications