தென்மேற்கு பருவமழை ஜோராக தொடங்கியது..குட் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன் கூட்டியே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்குப்பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பருவமழை தமிழகத்தில் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது.
நாட்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழைக்காலமாகும். வழக்கமாக பருவமழை ஜூன் 1ம் தேதி கேரளாவில் தொடங்கும். தமிழகம், கர்நாடகா,கோவா,மகாராஷ்டிரா என படிப்படியாக தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் பரவத் தொடங்கும்.
இந்தஆண்டு கடந்த 15ஆம் தேதி அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன் கூட்டியே கேரளாவில் தொடங்கியுள்ள பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் பரவத் தொடங்கும்.
ஜூன் 1ல் ஜோராகத் தொடங்கப்போகும் தென்மேற்குப் பருவமழை... அனுபவிக்கத் தயாராகுங்கள் மக்களே!
தென்மேற்கு பருவமழை
கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ஆம்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது. அதாவது மே 23ஆம்தேதியே மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியும் தென்பட தொடங்கியது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
அதன்பின்னர் வானிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. பருவமழையின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் தென்படாததால், 30ஆம்தேதிக்கு முன்பு மழை தொடங்க வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
பருவமழை தொடங்கியது
தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3 நாட்கள் முன்னதாகவே பருவமழை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வருகிற 1ஆம்தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயல்பான மழை அளவு
நடப்பாண்டு தெற்குமேற்கு பருவமழையின் நீண்ட கால சராசரி மழை அளவு 96 முதல் 104 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 99 சதவீதம் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5 சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த ஆண்டு முன்கூட்டிய பருவமழை தொடங்கியுள்ளதால் நாடு முழுவதும் நல்ல மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கலாம்.