ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்.. 2 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி
"இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு மிக அதிகம், இது சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என நீதிபதி கூறினார்.
சென்னை: ஆந்திராவில் இருந்து 160 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து160 கிலோ கஞ்சாவை இரண்டு பேர் கடத்தி சென்னைக்குள் வருவதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, சென்னை மாதவரம் அருகே ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டதில், 8 மூட்டைகளில் 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரங்கநாதன், வேலூரைச் சேர்ந்த செல்வம் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி இவர்கள் மீது குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி, இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1.70 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications