பாலியல் புகார்.. விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கு
சென்னை: காவல்துறை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நாமக்கல்லில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு தனது காரில் வந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிராக சிபிசிஐடி, பிப்ரவரி 27ஆம் தேதி பதிவு செய்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜூலை 29-ஆம் தேதி 1300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்து விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அதை மனதை செலுத்தி படித்து முடிவெடுக்காமல், விசாரணை வரம்பை கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் வழக்கு என்ற அழுத்ததிலேயே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த டிஜிபி-யாக பதவி உயர்வுக்கான பட்டியலில் உள்ள தன்னை பதவிநீக்கம் செய்யும் நோக்குடன், தனக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன் நடந்தது. முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.