இனி ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைக்கால சிறப்பு தொகை! அமைச்சர் கீதாஜீவன் சொன்ன குட் நியூஸ்
சென்னை: இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு நிதி வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். இந்த ஆண்டு ஏற்கெனவே கோடைக்கால சிறப்பு தொகை வழங்கப்பட்ட நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் மகளிருக்கு ரூ.2000 கோடைக்கால சிறப்பு தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மகளிர் உரிமைத் தொகை குறித்தும், கோடைக்கால சிறப்பு நிதி குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கோடைக்கால சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டிருப்பது, தோல்வி பயத்தை வெளிக்காட்டுவதாக விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்து பேசினார்.
அவர் பேசுகையில், இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைக்கால நிதியாக ரூ.2000 மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக எதிர்க்கட்சிகள் இந்த கோடைக்கால சிறப்பு தொகை குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தன. இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக்காலம் வருகிறதா? இதற்கு முன்னர் கோடைக்காலம் வரவில்லையா? ஏன் இந்த ஆண்டு மட்டும் கொடுக்கிறார்கள்? தேர்தல் அறிவிப்பை முன்னிட்டுதான் கொடுக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இப்படி இருக்கையில், இனி ஆண்டு தோறும் கோடைக்கால சிறப்பு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications