117 சீட்+ 4 அமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் அடம்? ராகுலின் ஜனவரி பிளான்? பீகாரை எதிர்நோக்கும் திமுக!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு வரும் அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க போகிறதாம். அதிலும் ஜனவரி மாதம் ராகுல் தமிழகத்தில் நடத்தும் மாநாட்டிற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சகோதரர்கள் என ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்கிறார்கள். அது போல் தமிழகத்திற்கு ராகுல் காந்தி வந்திருந்த போது ஸ்டாலினுக்கு பிடித்த ஸ்வீட்டை, சென்டர் மீடியனை தாண்டி ஒரு கடைக்குள் சென்று வாங்கி வந்து கொடுத்தார்.

இப்படியாக இரு தலைவர்களுக்கும் இடையே உறவு உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மீது திமுக விமர்சிப்பதும், அதற்கு அவர்கள் பதிலடி கொடுப்பதுமாக இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய் ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தையும் அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
விஜய் அழைக்கிறார்
புதிதாக கட்சி தொடங்கிய தவெக, ஆட்சியில் பங்கு கொடுப்பதாக கூறியுள்ளார். இதைத்தான் விசிக கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்தது.
காங்கிரஸ் கட்சி
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் அது போன்ற ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது 234 தொகுதிகளில் 117 தொகுதிகள், அதாவது சரி பாதி தொகுதிகளை கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாம். அது போல் ஆட்சியில் பங்கு கேட்கவும் முடிவு செய்துள்ளனராம்.
234 தொகுதிகள்
அதாவது 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெல்ல வேண்டியது உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியே 117 தொகுதிகளை கேட்பதால் அந்த கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தன் பங்குக்கு கொம்பு சீவிவிட்டார்.
விஜய் வசந்த் கருத்து
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாக கேட்கிறீர்கள். இது தான் அனைத்து காங்கிரஸ்காரர்களின் ஆசையாக இருக்கும். திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறோம்.
ஆட்சியில் பங்கு
எனவே ஆட்சியில் பங்கு வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு காங்கிரஸாரின் விருப்பமாகும். ஆனால் இதுகுறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவெடுக்கும் என தெரிவித்திருந்தார்.
4 அமைச்சர் பதவி
இந்த நிலையில் டெல்லி மேலிடமும் ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தமிழக சட்டசபையில் 4 அமைச்சர் பதவியையும் கேட்டு அந்த நிபந்தனையுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் சட்டசபைத் தேர்தல்
தற்போது பீகார் சட்டசபைத் தேர்தலில் தேசிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தி, தமிழகத்திற்கு நேரடியாக வரவுள்ளாராம். அவர் தலைமையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிரம்மாண்ட மாநாட்டை கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
காங்கிரஸ்
எனினும் அண்மைக்காலமாக பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து தேய்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு வேளை பீகார் சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி, "ஏதோ" தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டால் இது போன்று டிமான்ட் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகார் தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் டெல்லி தலைமையின் நிபந்தனைகளை திமுக அறிந்திருந்தும், அதை பற்றி பெரிதாக கண்டு கொள்ளாததற்கு பீகார் தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்கலாம் என்பதே காரணமாக இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. எது எப்படியோ அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அரசியல் கூட்டணியில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications