5 விஷயங்களில் கவனம் செலுத்தி ஸ்கோர் செய்த ஸ்டாலின்.. "ஹீரோ"வை "ஆக்ஷன் ஹீரோ"வாக்குவது எப்போது?
சென்னை: 8 வழிச்சாலை திட்டம், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் ரத்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை உள்ளிட்டவை நிராகரிக்கப்படும் என கதாநாயகனான திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதை செயல்படுத்துவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் வயிற்றில் இருந்து சிசு முதல் அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது.
பெண்கள், ஆட்டோ டிரைவர்கள், இளைஞர்கள், வாகன ஓட்டிகள், மீனவர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், குடிசை வாழ் மக்கள் உள்ளிட்டோரை குளிர வைக்கும் திட்டங்களை தேர்தல் அறிக்கைகளாக வெளியிட்டிருந்தார் ஸ்டாலின்.
மாநிலத்தில் எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன? மூத்த அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு
ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை, கொரோனா கால இழப்பீடாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 4000, குடிசை இல்லாத தமிழகம் இப்படி திட்டங்கள் போய் கொண்டே இருக்கின்றன.
கூட்டணி கட்சி
இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அடுத்த நாளே மேலும் 5 வாக்குறுதிகளை ஸ்டாலின் கொடுத்துள்ளார். இந்த 5 வாக்குறுதிகளும் திமுக, அதன் கூட்டணி கட்சிகளை தூக்கி விட்டது என்றே சொல்லலாம். அவை என்னவென பார்ப்போம்.
1.விவசாயிகளுக்கு எதிரான சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது.
2.காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அனுமதி அளிக்கப்படாது.
3. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019ஐ திரும்ப பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
4.குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
5.இந்திய முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கிட வலியுறுத்தப்படும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 நிராகரிக்கப்படும்.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை
முதலில் சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தங்கள் வாழ்வாதாரமான விவசாய நிலங்களையும் காடுகளையும் அழித்து செயல்படுத்துவதே இந்த திட்டமாகும். பசுமை நிறைந்த காடு, மலைகள், விளை நிலங்கள், நீர் நிலைகள் ஆகியவற்றை அழித்துவிட்டு விரைவு சாலை போடக் கூடாது என்பதே இந்த வழித்தட மக்களின் எதிர்பார்ப்பாகும்.
காட்டுப்பள்ளி துறைமுகம்
அடுத்ததாக காட்டுப்பள்ளி துறைமுகம். சென்னை எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் 82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 35 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும். 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள துறைமுகத்தை 6200 ஏக்கர்களுக்கு விரிவாக்கம் செய்வதே இந்த திட்டமாகும். இதனால் இயற்கைச் சூழல் அடியோடு அழிந்துவிடும் என்பதால் எதிர்ப்பு நிலவிகிறது.
இந்திய குடியுரிமை
அடுத்தது இந்திய குடியுரிமை சட்டம். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்துவர் ஆகிய மதப்பிரிவினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழி வகை செய்யும் சட்டமாகும். அதாவது மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை
அடுத்தது இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை. மேற்கொண்ட குடியுரிமை சட்டத்தில் இலங்கையிலிருந்து வருவோருக்கு இந்திய குடியுரிமை அளிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் இலங்கை போரின்போது இந்தியாவிற்கு வந்தவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்திய முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கிட வலியுறுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை
கடைசியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு 2020- எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்காது, அதன் தாக்கம் சுற்றுச்சூழலுக்கு எப்படி இருக்கும் என்று ஒரு மதிப்பீடு செய்யப்படுகிறது. இது குறைவாக இருந்தால் அனுமதி வழங்கலாம். அதிகமாக இருந்தால் அனுமதி வழங்கப்படாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் மதிப்பீடு தேவையில்லை என இந்த வரைவு முன்வைப்பதால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எப்போது அமல்?
ஆக விவசாயிகள், மீனவர்கள், சிறுபான்மையினர், இலங்கை தமிழர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வன ஆர்வலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரை மேற்கண்ட 5 வாக்குறுதிகள் மூலம் ஸ்டாலின் குளிரவைத்துவிட்டார். இதை அவர் எப்போது அமல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.