ஆ.ராசா பேச்சு பற்றி ஸ்டாலின் என்ன நினைக்கிறார்? ‘இப்போ கைது பண்ணுவீங்களா?’ - கொதித்து எழுந்த வானதி!
சென்னை : இந்துக்கள் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆ.ராசாவின் கருத்தை தி.மு.க ஏற்கிறதா, இல்லையா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பிறப்பின் அடிப்படையிலான எந்த வேறுபாட்டையும் தீண்டாமையும் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.க.வும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. பா.ஜ.க.வில் இருப்பவர்களுக்கு ஒருவரையொருவர் என்ன ஜாதி என்பதும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார் வானதி சீனிவாசன்.
முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஆ.ராசா இப்படி பேசியதற்கு, தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்காதது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார் வானதி சீனிவாசன்.

ஆ.ராசா பேச்சு
சென்னையில் நடந்த திராவிடர் கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. "நீ இந்துவாக இருக்கிற வரை சூத்திரன், சூத்திரனாக இருக்கிற வரை பஞ்சமன். இந்துவாக இருக்கிற வரை தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்." என்று பேசி இருந்தார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆ.ராசாவுக்கு வானதி கண்டனம்
இதற்கு பாஜகவினர் கடும் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மையில் சென்னையில் 'திராவிடர் கழகம்' நடத்திய விழாவில் பேசிய, தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, "இந்துவாக இருக்கும் வரை சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும்வரை நீ பஞ்சமன், இந்துவாக இருக்கும்வரை நீ தீண்டத்தகாதவன்" என்று, இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில், விஷத்தை கக்கியிருக்கிறார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக + இந்து மத வெறுப்பு
'தி.மு.க.வையும், இந்து மத வெறுப்பையும் ஒருநாளும் பிரிக்க முடியாது' என்பதற்கு ஆ.ராசாவின் இந்த பேச்சை விட வேறு உதாரணம் தேவையில்லை. பல ஆண்டுகள், பல துறைகளின் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போது நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர், தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் என, முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி பேசியதற்கு, தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. ஆ.ராசாவின் கருத்தை தி.மு.க ஏற்கிறதா, இல்லையா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

எங்களுக்கு என்ன ஜாதி என்பதே தெரியாது
"ஸ்ரீரங்கம் கோவில் முன்பு, கடவுளை நம்புபவன் முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி போன்ற வாசகங்களுடன் பெரியார் சிலை இருக்கலாமா?" என கேட்டது, குறித்து திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணனை தி.மு.க அரசு கைது செய்தது. அதுபோல, ஆ.ராசாவையும் தி.மு.க அரசு கைது செய்யுமா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். பிறப்பின் அடிப்படையிலான எந்த வேறுபாட்டையும் தீண்டாமையும் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.க.வும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸிலும், பா.ஜ.க.விலும் இருப்பவர்களுக்கு ஒருவரையொருவர் என்ன ஜாதி என்பதும் தெரியாது.

இந்தியாவை பிளக்கிறார்கள்
ஆர்.எஸ்.எஸ். முகாமிற்கு வந்த மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஜாதி பாகுபாடு இல்லை என்பதை நேரில் கண்டு பாராட்டியிருக்கிறார்கள். மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் எந்த கோட்பாட்டையும் பா.ஜ.க எதிர்க்கும். இந்து மதம் என்பது எப்போது தோன்றியது என்பது தெரியாத அளவுக்கு மிகப்பழமையானது. இந்து மதம், மற்ற மதங்களைப் போல நிறுவனம் அல்ல. இந்து மதத்தை ஒரு தனி நபரோ, நிறுவனமோ கட்டுப்படுத்தவில்லை. கட்டுப்படுத்தவும் முடியாது. இந்து மதத்தில் உள்ள சில வேறுபாடுகளை வைத்து, இந்துக்களை மதம் மாற்றி, இந்தியாவை பிளந்து கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்
மதமாற்றத்தால் தான், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் உருவாகின. எனவேதான், மதமாற்றத்தை பா.ஜ.க கடுமையாக எதிர்க்கிறது. ஆங்கிலேயர்களின் 'பிரித்தாளும் சூழ்ச்சி'யால் உருவான 'நீதிக் கட்சி'யின் தொடர்ச்சியே தி.மு.க. சிறுபான்மை மதத்தினர் தி.மு.கவின் முக்கிய வாக்கு வங்கியாக இருப்பதால், சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக, அவ்வப்போது இந்துக்களை சீண்டிக்கொண்டே இருப்பார்கள். அதைத்தான் இப்போது ஆ.ராசா செய்திருக்கிறார். வெளிப்படையாக மதமாற்றத்தை ஊக்குவிக்கும் இதுபோன்ற வெறுப்பை விதைக்கும் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

தந்திரம் பலிக்காது
இது தகவல் தொழில்நுட்ப யுகம். எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு, இந்துக்களை தந்திரமாக ஏமாற்றி விடலாம் என தி.மு.க.வினர் கனவு காண வேண்டாம். தி.மு.க.வின் தந்திர அரசியலையும், பிரிவினை அரசியலையும் தமிழர்கள் உணரத் தொடங்கி விட்டனர். தி.மு.க.வின் ஏமாற்று அரசியல் இனி எடுபடாது அதனால்தான், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினர் முழுமையாக தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தும், அ.தி.மு.க - பா.ஜ.க அணியை விட சுமார் 6 சதவீதம் மட்டுமே அதிகம் பெற முடிந்துள்ளது. அதுவும் 10 கட்சிகள் கூட்டணியை வைத்துக் கொண்டும் இதுதான் தி.மு.க.வின் நிலை.

சிறுபான்மையினரை தாஜா செய்ய
சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கு அதிகரிக்க, அதிகரிக்க, இந்துக்களின் ஆதரவை தி.மு.க இழந்து வருவதை, 2021 சட்டப்பேரவை தேர்தல் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே, காலம் மாறிவிட்டது. தமிழர்கள் விழித்துக் கொண்டுவிட்டனர் என்பதை உணர்ந்து தி.மு.க செயல்பட வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்" என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications