தலைநகர் சென்னையில் உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து! வேற லெவலில் திட்டம் தீட்டிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தலைநகர் சென்னையில் உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து முறை அமைய வேண்டும் எனப் பேசி முதலமைச்சர் ஸ்டாலின் தனது கனவுத் திட்டங்களில் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் தலைவர் என்ற முறையில் அக்குழுமத்தின் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், இந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

போக்குவரத்து நெரிசல்
சென்னை நகர போக்குவரத்து நெரிசல் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்குவரத்து வசதிகளை திட்டமிட்டுப் பெருக்க வேண்டியுள்ளது. அதற்காக நாம் புதிய தொழில்நுட்பங்களை, அதாவது new technologies எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

உலகத் தரத்தில்
உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும். பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிறப்பாக கட்டமைக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் குறையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதே அளவுக்குக் குறையும்.

பள்ளி மாணவ மாணவிகள்
எனவே பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்பானது தனது பணிகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும். இதில் நான் குறிப்பாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புவது பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் அவை காலையில் துவங்கி மாலையில் முடியும் நேரத்தை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்றும் இந்த தருணத்தில் கேட்டுக்கொண்டு, மீண்டுமொரு முறை இந்த அமைப்பின் தலைவர் என்ற முறையிலே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

முதல்வர் பேச்சு
மேற்கண்டவாறு முதல்வர் பேசியிருக்கிறார். இதனிடையே தலைநகர் சென்னையில் உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து முறை அமைய வேண்டும் என அவர் தனது கனவுத் திட்டம் குறித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications