2030ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர்! இலக்கை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை! ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: 2030ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் தமிழ்நாடு என்ற இலக்கை எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழாவில் முதல்வர் ஆற்றிய உரை வருமாறு;
''நான் கடந்த மே மாதம் சிங்கப்பூருக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தேன். அங்கே கிடைத்த வரவேற்பும், உற்சாகமும் எங்களால் மறக்க முடியாதது. இந்தப் பயணத்தின்போது, கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் C.E.O. சஞ்சீவ் தாஸ் குப்தாவை சந்தித்து, பல முதலீட்டுத் திட்டங்களை தமிழ்நாட்டில் மேற்கொள்வதை பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினேன். தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வார்கள். அது போலவே நடந்திருக்கிறது. ''
''தொழில்துறையில் முதன்மை மாநிலமாக முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அது மட்டுமல்ல, இந்த வளர்ச்சி சீராகவும், பரவலாகவும் இருக்க வேண்டுமென்று மாநிலத்தில் இருக்கின்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் 9 நியோ டைடல் பார்க்குகள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் வருகிறது. ''
''உலக அளவில், அதிவேகமாக ஏற்பட்டு வருகின்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய தொழில்துறையும் பயணம் செய்வது இன்றியமையாத ஒன்று. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில், தமிழ்நாடு உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும். இந்த வேகத்தை பார்க்கின்றபோது "2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற எங்கள் இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது. ''
''பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தசோ சிஸ்டம், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீமென்ஸ், அமெரிக்க நிறுவனமான ஜி.இ. ஏவியேஷன் உடன் இணைந்து, மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையங்கள் (Centres of excellence) மற்றும் தொழில் புத்தாக்க மையங்களை (Start-Ups) தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூரில் இருக்கின்ற சிப்காட் தொழிற் பூங்காக்களில், உலகத் தரம் வாய்ந்த தொழில் புத்தாக்க மையமும் அமைக்கப்பட்டு வருகிறது. ''
''இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கின்றோம். உங்களைப் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள். பல நிறுவனங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்று பெருமைப்படுத்த இருக்கிறார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.''












Click it and Unblock the Notifications