தொடரும் “அட்டாக்”.. பாஜக பிரமுகர் வீட்டில் விழுந்த கல் - சிதறிய கண்ணாடி! சென்னையில் பதற்றம்
சென்னை: திருவொற்றியூரில் பாஜக பிரமுகரின் வீட்டில் மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடி உடைத்து விட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வட சென்னை திருவொற்றியூர் பகுதியில் வடக்கு மாடவீதியில் வசித்து வருபவர் ரவி. திருவொற்றியூர் பாஜக மண்டல தலைவரான இவரது வீட்டில் மர்ம நபர்கள் 4 பேர் கல்வீசி தாக்கிவிட்டு தப்பியோடி இருக்கின்றனர்.
அந்த நேரத்தில் வீட்டில் இல்லாத ரவி இதுகுறித்து போலீசாரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரியபடுத்தி இருக்கிறார். அதன் அடிப்படையில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

போலீஸ் விசாரணை
புகாரை தொடர்ந்து தொடர்ந்து சம்பவ இடமான ரவியின் வீட்டிற்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தடயவியல்துறை அதிகாரிகள் ஆதாரங்களை கிடைக்கின்றதா என அலசி ஆராய்ந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை தாக்குதல்
கடந்த 22 ஆம் தேதி மாலை கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மறுநாள் இரவும் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை அதிகரித்தது.

பெட்ரோல் குண்டு வீச்சு
இதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட சுமார் 20 இடங்களிலில் மர்ம நபர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி சென்று இருக்கிறார்கள். இதில் யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும் தொடர் தாக்குதல்களால் பதற்றம் நிலவுகிறது. இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் பாஜக நிர்வாகிகள் வாகனங்கள் எரிக்கப்பட்டன.

பலர் கைது
இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் அதிகமானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்து இருந்தார். பல இடங்களில் பாஜக பிரமுகரின் வீடுகள் தாக்கப்பட்ட சர்ச்சையே அடங்காத நிலையில் தற்போது சென்னையில் பாஜக பிரமுகரின் வீட்டில் நடந்த இந்த கல்வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது












Click it and Unblock the Notifications