வகுப்பறையில்.. சக மாணவி மடியில்படுத்தபடி.. செல்போனில்.. எங்கே செல்கிறது தமிழ் மாணவர் சமூகம்?
சென்னை: தமிழக பள்ளிகளில் தொடர்ச்சியாக மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வரும் படங்கள், வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது மாணவிகளின் மடியில் தலைவைத்து படுத்து செல்போனில் மாணவர்கள் விளையாடும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய உலகம் கல்வி துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. காலையில் எழுந்து குளித்து பள்ளிக்கு சென்ற மாணவர்களை வீட்டிலேயே முடக்கி ஆன்லைன் வகுப்புக்கு மாற செய்தது.
இதன்மூலம் எல்கேஜி முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் செல்போனில் பாடம் கற்க தொடங்கினர். படிக்கும் மாணவர்களுக்கு செல்போன் வழங்க மறுத்த பெற்றோர்களின் மனதையும் இந்த கொரோனா மாற்றிவிட்டது.

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமை
படிப்புக்காக மாணவர்களின் கையில் அவர்களின் பெற்றோர் செல்போன் வழங்கினர். ஆனால் மாணவர்கள் படிப்புக்கு மட்டுமின்றி விளையாட்டுக்கும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமான மாணவர்கள் பள்ளி பாடங்களை விட்டுவிட்டு ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு சிறைப்பட்ட மாணவர்கள் தந்தை, தாயின் பணத்தை விளையாட்டு மூலம் இழந்து உதைப்பட்ட கதைகளும் உண்டு.

மீள முடியாத மாணவர்கள்
தற்போது நேரடி வகுப்புகள் துவங்கி நடந்தாலும் கூட இந்த 2 வருடம் மாணவர்களின் நடத்தையை முற்றிலும் மாற்றிவிட்டது. வீடுகளில் இருந்தபோது கைகளில் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். மேலும் செல்போன்களை ஆசிரியர்களுக்கு தெரியாமல் வகுப்பறைக்கு எடுத்து சென்று அங்கும் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இது மாணவ பருவத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும் என கல்வியாளர்கள் அச்சப்படுகின்றனர். பெற்றோர், ஆசிரியர்களுக்கு கீழ்படியாத மாணவர்களால் சமீப நாட்களாக கல்வி நிறுவனங்களில் மோசமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆசிரியரை தாக்க முயற்சி
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மாதம் அரசு பள்ளி மாணவிகள் பேருந்தில் மதுகுடித்து ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் முன்பே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டனர். ஆசிரியர்களையும் எதிர்த்து பேசினர். மேலும் ஆசிரியை பாடம் நடத்தும்போது மாணவர்கள் ஒரு குழுவாக எழுந்து நின்று குத்தாட்டம் போட்ட சம்பவம் நடந்தது. தலை முடியை ஒழுங்காக வெட்டி வா என்று ஆசிரியர், மாணவர்களை அறிவுறுத்தலினால் அவரை அடிக்க பாய்வது போன்ற செயல்கள் மாணவர் சமுதாயம் தடம் மாறி செல்கின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவிகள் மடியில் படுத்து விளையாட்டு
இவை ஒருபுறம் இருக்க வகுப்பறையிலேயே மாணவர்கள் செல்போன் பார்ப்பதும், மாணவிகள் மடியில் மாணவர்கள் தலை சாய்த்து இருப்பதும் போன்ற படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மதிய உணவு நேரத்தில் இத்தகைய செயல்களில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவம் தமிழக பள்ளியில் நடந்தது என்றால் நம்ப முடிகிறதா?.

தடுப்பது அவசியம்
இதுமட்டுமின்றி வகுப்பறையில் இருக்கையை மாணவர்கள் சேதப்படுத்தி அதனை செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ள மற்றொரு சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் உடன் படிக்கும் சக மாணவர்களிடம் 'ராகிங்' செய்த சம்பவம் பெற்றோர்களை மிரள வைத்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர் சமுதாயம் மோசமான நிலையை எதிர்கொள்ளும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications