சாதித்த ராமதாஸ்.. சாந்தமாக வென்ற எடப்பாடியார்.. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா அமலானது
சென்னை: டாக்டர் ராமதாஸ் சாதித்தே விட்டார்.. இறுதியில் ஒருவழியாக இடஒதுக்கீடு மசோதா அமலாகி விட்டது.. இத்தனை நாள் காத்து கிடந்ததற்கான பலனை பாமக அறுவடை செய்ய போகிறது.. அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.!
தேர்தல் நெருங்குகிறது.. வழக்கமாக இந்த நேரம் கூட்டணி, சீட் ஒதுக்கீடு முடிவாகி பிரச்சாரத்துக்கே அனைத்து கட்சிகளும் சென்றிருக்க வேண்டியது..
பாமகவின் தயவு அதிமுகவுக்கு தேவை அதிகமாக இருப்பதால், அந்த கட்சியுடன் கூட்டணி முடிவாகாமல் இருந்தது. இதற்கு காரணம் டாக்டர் ராமதாஸ்.

அக்கறை
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி தன் தரப்பு வாதத்தை தமிழக அரசிடம் முன்வைக்க ஆரம்பித்தார்.. வன்னியர்கள் நலனில் உள்ள தன் அக்கறையை கோரிக்கையாகவும் விடுக்க ஆரம்பித்தார் ராமதாஸ்.. இதற்காக பல கட்ட போராட்டங்களையும் அறிவித்து, அதனையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணியில் நீடிக்க இதை ஒரு நிபந்தனையாகவே பாமக வைத்திருப்பதாக தெரிகிறது.

சிக்கல்கள்
பொதுவாக, தேர்தல் சமயங்களில் இதுபோன்ற இடஒதுக்கீடு விஷயத்தில் அரசு கவனம் செலுத்துவது கிடையாது... காரணம் தீர்மானம் நிறைவேற்றுவதிலும் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அது சாத்தியமில்லை என்று கருதப்படும்.. அதுமட்டுமல்ல, ஒரு சமூகத்துக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கினால், மற்ற ஜாதியினரும் கிளம்பி விடுவார்கள் என்பது இயல்பான ஒன்றுதான்.. இப்படித்தான் கருணாஸ் முட்டுக்கட்டை போட்டார்.. பிரேமலதா டென்ஷன் ஆனார்..

நிதானம்
ஆனாலும், எடப்பாடியார் இந்த விஷயத்தில் படு நிதானமாகவும், பக்குவமாகவும் செயல்பட்டார்.. அவசரப்படாமல், பொறுமையாக ராமதாஸுடன் தொடர்ந்து பேசி வந்தார்.. இதற்காக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்யும் என்ற ஒரு பேச்சு சில தினங்களாகவே இருந்து வருகிறது.. அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் இருக்கும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய முடிவாகும் என்றும், 2012-ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக சந்தானம் குழு கொடுத்த அறிக்கையின்படி உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.

நிறைவேற்றம்
அதனால், இந்த இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி வந்த நிலையில்தான், இன்றைய தினம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது... மேலும் சீர்மரபினருக்கு 7 சதவிகித தனி இடஒதுக்கீடு, இதர ஜாதியினருக்கு 2.5 சதவீத ஒதுக்கீடு வழங்கவும் இம் மசோதா வகை செய்கிறது.

சபாஷ்
இந்த அறிவிப்பினால் வன்னியர்கள் சமூகம் நிம்மதியடைந்துள்ளது.. ராமதாஸின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.. இதனால் கூட்டணி வலுவாகி உள்ளது.. அதனால், அதிமுக கூட்டணிக்கு வன்னிய சமுதாய வாக்குகள் பிரதானமாக கிடைக்க வாய்ப்புள்ளது.. அதேசமயம், தேர்தலில் பிற சமுதாயத்தினரின் எதிர்ப்பு ஓட்டுக்களையும் அதிமுக அறுவடை செய்ய நேரிடுமா என்ற கேள்வியும் எழுகிறது.












Click it and Unblock the Notifications