பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுக்கரும்பு! எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி! அதிமுக பெருமிதம்!
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுக் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், இது எடப்பாடி பழனிசாமிக்கும், விவசாயிகளின் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என அதிமுக பதிவு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுக் கரும்பை வழங்கக் கோரி அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ஆம் தேதி திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்த சில மணி நேரங்களில் முதல்வர் கரும்பு வழங்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படுவது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகவுள்ள தகவலை அறிந்து தான் அதிமுக போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக திமுக பதிலடி கொடுத்து வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு துண்டு கரும்பு வழங்குவதால் பட்ஜெட்டில் என்ன துண்டு விழப் போகிறதா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வினவியிருந்தார். இதனிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் கூட வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கரும்பை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வந்த நிலையில், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications