அவசரப்பட்டுட்டோமோ? யோசிக்கும் வேலி தாண்டிய நிர்வாகிகள்! வாய்ப்பில்லை ராஜா.. ஒரே போடாய் போட்ட ’மாஜி’!
சென்னை : அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வீசி வந்த ஆதரவு காற்று தற்போது எடப்பாடி பக்கம் திரும்பி உள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகள் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என யோசித்து வரும் நிலையில் இனி திரும்பி வரவெல்லாம் வாய்ப்பு இல்லை என மூத்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த 17ம் தேதி தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
அதே நேரத்தில் நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவு எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த பதினெட்டாம் தேதியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
கேட்டுச்சா.. ‛இடைக்கால’ இல்லை.. அதிமுக நிரந்தர பொதுச்செயலாளரே இபிஎஸ் தான்!அழுத்திய மாஜி அமைச்சர்கள்
மேல்முறையீடு
மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் நீதிபதிகள் துரைசாமி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு தொடர்பாக விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக கூறியுள்ளனர். இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் செல்லும் என கூறினர்.
எடப்பாடு பழனிசாமி
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், உடனடியாக தனது ட்விட்டர் ஹேண்டிலில் 'இடைக்கால பொதுச்செயலாளர்' என மாற்றினார். அதுமட்டுமின்றி அதிமுக நிரந்தர பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தலை விரைவில் நடத்தி பொறுப்பேற்கவும் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர். இதற்காக ஆணையர்களாக ஏற்கனவே நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதரவாளர்கள் உற்சாகம்
இந்நிலையில் உயர் நீதிமன்ற இரு அமர்வு நீதிபதிகளின் தீர்ப்பினால் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது சட்டப்படி உறுதியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டதும் சட்டப்படி உறுதியாகி இருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் உலா வருகின்றனர். அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பு இந்த தீர்ப்பினால் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் அவர்களை சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
கிண்டல்
எடப்பாடி தரப்பிலேயே இருந்திருந்தால் ஒன்றிய செயலாளர் பதவியாவது கிடைத்திருக்கும் தற்போது அதுவும் போய்விட்டது இது தேவையா? என பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில் கொஞ்சம் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ என யோசனையில் இருக்கின்றனர் பல ஒன்றிய செயலாளர்கள், இதுகுறித்து மூத்த முன்னாள் அமைச்சரிடம் திரும்ப வரலாம் என இருக்கிறோம் என பேசிய போது,'அவரை நம்பி போனீங்கள்ள அப்படியே போங்க..' என முகத்தில் அடித்தார் போல் பேசியதாக கூறப்படுகிறது. வேறு வழி இல்லாமல் ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் நிர்வாகிகள் அடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பாவது தங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா என யோசித்து வருகின்றனர்.