2 எம்.எல்.ஏக்களை தூக்கி பாருங்க.. ஆட்சியையே கலைச்சு விட்ருவோம் - போனதுமே தி.மு.கவை எச்சரித்த சூர்யா!
சென்னை: தி.மு.க பா.ஜ.கவிலிருந்து 2 எம்.எல்.ஏக்களை தூக்கினால், தி.மு.க ஆட்சியே கலைக்கப்படும் என பா.ஜ.கவில் இணைந்துள்ள திருச்சி சிவாவின் மகன் சூர்யா எச்சரித்துள்ளார்.
தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார்.
பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் இருவர் எங்களோடு தொடர்பில்தான் உள்ளனர். முதல்வர் ஒப்புதல் கொடுத்தால் தூக்கிவிடுவோம் என தி.மு.க எம்.பி ஒருவர் கூறியதற்கு சூர்யா சிவா பதிலடி கொடுத்துள்ளார்.
“பழைய தி.மு.க-வ பார்க்கணும்னா இப்படி பண்ணுங்க..” - ஸ்டாலினிடம் இருந்து பறந்த அதிரடி ஆர்டர்!
திருச்சி சிவா மகன் சூர்யா
தி.மு.க மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்த பா.ஜ.கவில் இணைந்த சூர்யா சிவா, ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பா.ஜ.கவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்யப்போவதாகத் தெரிவித்தார்.
தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் திருச்சி சிவா எம்.பியின் மகன் திடீரென பா.ஜ.கவில் இணைந்தது தி.மு.க தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2 பாஜக எம்.எல்.ஏக்களை தூக்குவோம்
இந்நிலையில் பா.ஜ.கவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தருமபுரி தி.மு.க எம்பி செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "தி.மு.கவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் பா.ஜ.கவினருக்கு ஒரு தகவல், உங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் எங்கள் தொடர்பில் உள்ளனர். எங்கள் தலைமை கண்ணசைத்தால் அந்த இரண்டு பேரையும் தூக்கி விடுவோம்" எனப் பதிவிட்டார்.
இது அரசியல் அரங்கில் பரபரப்பை அதிகரித்தது. பா.ஜ.கவின் அந்த 2 எம்.எல்.ஏக்கள் யார் என்றும் சமூக வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
எனக்கும் தந்தைக்கும் முரண்பாடு
இந்நிலையில், பா.ஜ.கவில் சேர்ந்த சூர்யா, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கட்சிக்காக நிறைய உழைத்திருக்கிறேன். தி.மு.கவில் உழைப்புக்கேற்ற வளர்ச்சி இல்லை. பல அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் உங்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என பலர் என்னை கேட்கின்றனர். அவர்களுக்கெல்லாம் அவர்கள் தகப்பன்மார்கள் கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து அவர்களுக்கு பதவி வாங்கி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை. எனக்கும் என் தந்தைக்கும் இருக்கிற முரண்பாடு காரணமாக அவர் எனக்கு உதவி செய்யும் சூழ்நிலை இல்லை எனக் கூறியுள்ளார்.
மோடி நேர்மையாளர்
தி.மு.க எம்.பி கனிமொழியின் ஆதரவாளராக இருந்தேன். ஆனால் இப்போது கனிமொழியே ஓரம்கட்டப்படுகிறார். நான் இனி தி.மு.கவில் வளர வாய்ப்பு இல்லை. அதனால்தான் எனது அரசியல் எதிர்காலத்திற்காக பா.ஜ.கவை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
பா.ஜ.கவை தமிழகத்துக்குள் நுழையவிடக்கூடாது என தொடர்ந்து அக்கட்சி மீது தி.மு.க அவதூறு கருத்துக்களை கூறி வருகிறது. மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள், பிரிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால் உண்மையிலேயே மோடி நேர்மையாளர் என சூர்யா தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஆதிக்கம்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எம்.அப்துல்லா, டி.ஆர்.பி ராஜா, நாமக்கல் ராஜேஷ்குமார், ஐ.பி.செந்தில்குமார் என கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள பலரும் தி.மு.கவிற்கு நெருக்கமானவர்கள்தான். உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்ற ஆட்கள்தான் கட்சியின் எல்லா மட்டத்திலும் இருக்கிறார்கள்.
தி.மு.கவில் அடிமைத்தனம் அதிகமாக இருக்கிறது. தி.மு.கவில் உறுப்பினராக கூட இல்லாதவர், ஸ்டாலின் குடும்பத்தினரின் நெருக்கம் காரணமாக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆட்சியையே கலைப்போம்
தருமபுரி தி.மு.க எம்பி செந்தில் குமார், பா.ஜ.கவின் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் எங்கள் தொடர்பில் உள்ளனர். எங்கள் தலைவர் கண்ணசைத்தால் இரண்டு பேரையும் தூக்கி விடுவோம்" எனப் பதிவிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த சூர்யா, "அவர்கள் எங்கள் இரண்டு எம்.எல்.ஏ.க்களை தான் தூக்குவார்கள். அவர்கள் 2 எம்.எல்.ஏக்களை தூக்கினால் நாங்கள் தி.மு.க ஆட்சியையே கலைத்துவிடுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.