தாசில்தார் சம்பளம் விடுங்க.. வட்டாட்சியர், விஏஓ பவர் தெரியுமா? மக்கள் குறை தீர்க்கும் அதிகார பலம்
சென்னை: தமிழக அரசின் வருவாய்த் துறையில் அடித்தளமாக விளங்குபவர் VAO எனப்படும கிராம நிர்வாக அலுவலர், அவருக்குத் தலைமைப் பொறுப்பில் வழிகாட்டியாக இருப்பவர் Tahsildar எனப்படும் வட்டாட்சியர் ஆவர்.. இவர்கள் இருவருமே பொதுமக்களின் அன்றாடத் தேவைகளுக்கும் அரசுக்கும் இடையிலான மிக முக்கியமான பாலங்களாகச் செயல்படுகிறார்கள். இவர்களின் அதிகாரங்கள் மற்றும் அவர்கள் மக்களுக்குச் செய்யும் பணிகள் குறித்து சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஒரு கிராமத்தின் அனைத்து நிர்வாகப் பணிகளுக்கும் பொறுப்பானவர் கிராம நிர்வாக அலுவலர். அடிமட்ட அளவில் மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பவர் இவரே.

விஏஓ அதிகாரங்கள் என்னென்ன
கிராமத்தின் நிலப் பதிவேடுகளைப் பராமரிப்பது இவருடைய முதன்மையான பணி. நிலங்களின் எல்லைகள், உரிமையாளர்கள் மற்றும் பயிர் விவரங்களை அடங்கல் பதிவேட்டில் இவர் முறையாகப் பதிவு செய்வார். பொதுமக்களுக்கு தேவையான சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்றவற்றுக்கு முதற்கட்டமாகப் பரிந்துரை செய்வதும் இவரேதான்.. விஏஓவின் கள ஆய்வுக்குப் பிறகே மேல் அதிகாரிகள் சான்றிதழ்களை வழங்குகிறார்கள்.
மேலும், கிராமத்தில் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்வது, முதியோர் உதவித்தொகை போன்ற அரசுத் திட்டங்களுக்குத் தகுதியானவர்களைக் கண்டறிவது போன்ற பணிகளையும் விஏஓ மேற்கொள்கிறார்.
கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது எதிர்பாராத விபத்துகள் நடந்தாலோ, அது குறித்து வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவிக்கும் பொறுப்பும் இவருக்கு உண்டு. சுருக்கமாகச் சொன்னால், ஒரு கிராமத்தின் வரவு-செலவு முதல் வளர்ச்சி வரை அனைத்தையும் கண்காணிக்கும் அதிகாரியாக இவர் செயல்படுகிறார்.
தாசில்தார் - தாலுக்காவின் தலைமை நிர்வாகி
ஒரு தாலுக்கா அல்லது வட்டாரத்தின் ஒட்டுமொத்த வருவாய் நிர்வாகத்திற்கும் தலைவராக இருப்பவர் வட்டாட்சியர். வட்டாட்சியர் எனப்படும் தாசில்தார் அதிகாரம் என்பது இன்னும் பரந்து விரிந்தது.. ஒரு தாலுக்காவிற்கு இவர்தான் ராஜா.இவருக்குக் கீழே பல கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பணிபுரிவார்கள்.
வட்டாட்சியர் ஒரு நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். ஒரு பகுதியில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் சூழல் ஏற்பட்டால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இவருக்கு அதிகாரம் உண்டு. நிலப் பட்டா மாறுதல், நில அளவீடு தொடர்பான சிக்கல்கள் மற்றும் எல்லைத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதில் இவருடைய முடிவு முக்கியமானது.
தேர்தல் காலங்களில் ஒரு வட்டாரத்தின் உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியாகப் பணியாற்றுவது, ரேஷன் கார்டுகள் வழங்குவதை மேற்பார்வை செய்வது மற்றும் பேரிடர் காலங்களில் (வெள்ளம், புயல்) மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பது இவருடைய மிக முக்கியமான பொறுப்புகள். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது இறுதி விசாரணை நடத்தி, தீர்வு காண்பதில் இவருக்குப் பெரும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் விதம்
பொதுமக்கள் ஒரு சான்றிதழ் பெறவோ அல்லது நிலம் சம்பந்தமான சிக்கல்களைத் தீர்க்கவோ முதலில் VAO-வை அணுக வேண்டும். அவர் நிலத்தைச் சரிபார்த்து அல்லது நேரடி விசாரணை நடத்தி வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், வட்டாட்சியர் இறுதி ஆணை பிறப்பிப்பார்.
பொதுமக்கள் தங்களின் பட்டா பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு புகார், அல்லது அரசின் நலத்திட்ட உதவி வேண்டி மனு அளித்தால், அதை விஏஓ கள ஆய்வு செய்து அறிக்கை தருவார்.. அதன் அடிப்படையில் வட்டாட்சியர் மக்கள் குறைகளைத் தீர்த்து வைப்பார்.. 8 வழிச் சாலை முதல் ஒரு சென்ட் பட்டா வரை அனைத்திலும் இவர்களின் அதிகார பலம் மிக முக்கியமானது..
தாசில்தார் சம்பளம்
இவ்வளவு பொறுப்புகளைச் சுமக்கும் வட்டாட்சியர்களின் ஊதியம் பற்றிப் பார்த்தால், அவர்கள் தமிழக அரசின் 20-வது ஊதிய நிலையில் (Level 20) வருகிறார்கள்.. அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி என அனைத்தும் சேர்த்து ஒரு வட்டாட்சியர் ஆரம்பத்திலேயே சுமார் 50,000 ரூபாய்க்கு மேல் ஊதியமாக பெறுகிறார்கள்..
இவ்வளவு அதிகாரமும் பொறுப்பும் கொண்ட இந்தப் பதவி, மக்கள் சேவையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.. தாசில்தார், விஏஓ என இந்த 2 அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே அரசின் நலத்திட்டங்கள் தகுதியான மக்களைச் சென்றடைகின்றன.












Click it and Unblock the Notifications