பிள்ளைகளிடம் அன்போட பேசுங்க... வீட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் - நீதிபதிகள் அறிவுரை
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததே, இளம்பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதற்கு காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை: பெற்றோர்களிடம் இருந்து உரிய அன்பு கிடைக்காத காரணத்தினால்தான் இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டு சென்றதாக 53,898 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தரக் கோரி, அவரது தாய் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோகும் இளம்பெண்கள் திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக பதிலளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே திருமணமான நபர்களின் சுயரூபம் மற்றும் உண்மை விபரம் தெரியாமல் இளம்பெண்கள், வீட்டை விட்டு வெளியேறுவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டு சென்றதாக 53,898 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெற்றோர்கள் தங்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததும், அவர்களுக்கு உரிய அன்பும் பரிவும் கிடைக்கபெறாததே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக அமைவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த விவகாரத்தில் மத்திய சமூக நலத்துறையை தாமாக முன்வந்து பதில் மனுதாரராக இணைத்த நீதிபதிகள், இது போன்ற நிகழ்வுகளை தடுக்க மத்திய - மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் படி உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications