“கூஸ் பம்ப்ஸ்”.. இதனால்தான் தமிழ் “கெத்து” - ஆங்கில நாளிதழில் ட்ரூ காலர் விளம்பரத்தை பார்த்தீங்களா?
சென்னை: முன்னணி ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கான பதிப்பில் வெளியான ட்ரூ காலர் செயலி விளம்பரம் இந்தியில் எழுதப்பட்டு இருந்த நிலையில் சென்னை பதிப்பில் மட்டும் தமிழிலேயே எழுதி இருக்கிறார்கள்.
இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழ்களில் ஒன்றாக பல மாநிலங்களில் பதிப்புகளை வெளியிட்டு வருகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நகரங்களில் மாநில செய்திகளுக்கு ஏற்ப பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.

ட்ரூ காலர் விளம்பரம்
இந்த நிலையில் இன்று (நவம்பர் 3) வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா பதிப்பில் முன் பக்கத்தில் பிரபல ஸ்மார்ட் ஃபோன் செயலியான ட்ரூ காலரின் விளம்பரம் இடம்பெற்று இருந்தது. ஒருவரின் முகம் முழுவதும் சிலர் சிவப்பு சாயம் பூசுவதை போன்ற படத்துடன் வந்த அந்த விளம்பரம் இருந்தது.

இந்தி வாசகம்
டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 5 நகரங்களுக்கான டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பதிப்புகளில் "Buri neeyat wale tera call laal. True Caller Par Dikhe fraud call laal" என்று இந்தி வாக்கியத்தை ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்கள். செல்போனில் Fraud என ஆங்கிலத்திலும் கீழே, "Scan to download the app" என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

மாநில மொழிகள்
இதில் மும்பையில் மராத்தி, கொல்கத்தாவில் பெங்காலி, பெங்களூருவில், கன்னடம், ஐதராபாத்தில் தெலுங்கு மொழிகள் தாய் மொழியாக உள்ளன. ஆனாலும், அந்தந்த நகரங்களில் வெளியான பதிப்புகளில் இந்தி மொழியிலேயே ட்ரூ காலர் விளம்பரம் இடம்பெற்று இருந்தது.

சென்னையில் வித்தியாசம்
ஆனால், சென்னையில் அச்சிடப்பட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா விளம்பரத்திற்கும் மற்ற நகரங்களில் அச்சிடப்பட்ட விளம்பரத்துக்கு ஒரு வித்தியாசம் இருந்தது. அதுதான் மொழி. சென்னை டைம்ஸ் ஆஃப் இந்தியா பதிப்பில் தமிழ் மொழியில் ட்ரூ காலர் விளம்பரம் இடம்பெற்றது.

தமிழில் விளம்பரம்
அதுவும் மற்ற நகரங்களில் அச்சிடப்பட்ட பதிப்புகளில் இந்தியை ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்கள். ஆனால், சென்னையில் தமிழ் வாக்கியத்தை தமிழிலேயே எழுதி உள்ளார்கள். "ட்ரூ காலர்ல சிகப்பு கலர் எரியும். அப்ப அது மோசடி கால்னு தெரியும். ஆப் டவுன்லோடு செய்ய ஸ்கேன் செய்யுங்கள்." என்று குறிப்பிட்டதுடன் செல்போன் படத்திலும் Fraud என்று எழுதாமல் மோசடி என்றே பதிவிட்டு இருக்கிறார்கள்."

இந்தி திணிப்பு எதிர்ப்பு
தமிழ்நாட்டில் இதற்கு முன் சில நிறுவனங்கள் வெளியிட்ட விளம்பரங்கள் தமிழில் அல்லாமல் இந்தியில் இருந்ததற்காக கடும் விமர்சனங்களை சந்தித்தன. மற்ற மாநிலங்களில் அதுபோன்ற எதிர்ப்புகள் அதிகம் எழவில்லை. அதேபோல் பெரியார், அண்ணா காலத்தில் இருந்தே இந்தி திணிப்பு எதிராக இந்தியாவிலேயே முதலில் குரல் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

தமிழ் உணர்வு
மற்ற மாநிலங்களில் பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இந்தி, ஆங்கிலம், மாநில மொழி என மும்மொழிக் கொள்கை உள்ள சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கையே தொடர்ந்து அமலில் இருக்கிறது. தமிழ் மக்களின் மொழி உணர்வை உணர்ந்த ட்ரூ காலர் தமிழில் விளம்பரம் செய்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications