இந்த மனசுதான் சார் கடவுள்.. மனநோயாளிகளை தேடிச் சென்று.. உணவு ஊட்டி.. ஒரு தொழிலாளியின் உன்னத சேவை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தன்னார்வ அமைப்புகள் பல்கி பெருகி விட்டன. இதில் பெரும்பாலான அமைப்புகள் ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவி புரிந்து அவர்களின் இருண்ட வாழ்க்கையில் ஒளியை ஏற்றி வருகின்றன என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் ஒரு சில போலி தன்னார்வ அமைப்புகள் 'ஏழை, எளியவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவுகிறோம்'என்ற பெயரில் வெளிநாடு மற்றும் பல இடங்களில் அதிகமான நன்கொடைகளை பெற்று ஏழைகளின் வயிற்றை நிரப்பாமல், தங்களின் பாக்கெட்டை நிரப்பி வருவதாக கூறப்படுகிறது.

இப்படி மக்களின் வறுமையை விளம்பரப்படுத்தி சம்பாதித்து வரும் ஒரு சில போலி அமைப்புகளுக்கு ''இதற்கு பெயர் தான் உண்மையான சேவை '' என்று தலையில் குட்டி உணர்த்தி வருகிறார் கூலி தொழிலாளி ஒருவர். அவர் யார்? அப்படி என்னதான் செய்து விட்டார்? வாங்க தொடர்ந்து பார்க்கலாம்.

ஐயப்பனின் செயல்

ஐயப்பனின் செயல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். சாதாரண கூலித் தொழிலாளி. தனக்கு அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார். ஆனாலும் மற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஐயப்பனின் மனதில் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருந்தது. தினமும் வேலைக்கு சென்று வரும் நிலையில் அந்த பகுதிகளில் இருக்கும் மனநோயாளிகள் நிலையை பார்த்ததும் ஐயப்பன் கண்களில் இருந்து தானாக நீர் வழிந்தது.

மிகப்பெரும் சேவை

மிகப்பெரும் சேவை

இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவரது மனம் துடித்தது. இதனை தொடர்ந்து சற்றும் தாமதிக்காமல் உடனடியாக களத்தில் இறங்கினார் அவர். அந்த பகுதிகளில் உள்ள மனநோயாளிகளுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் பணியை செய்ய தொடங்கினர் ஐயப்பன். சொற்ப வருமானம் உள்ளதே என்று கவலைப்படாமல் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் சிறு பகுதியை ஒதுக்கி மனநோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

உணவு ஊட்டுகிறார்

உணவு ஊட்டுகிறார்

குழந்தைக்கு நிகரான மனநோயாளிகளை கண்டால் சிலர் பத்து அடி பாய்ந்து ஓடுவார்கள். ஒரு சிலர் அவர்களை அடித்து துரத்துவார்கள். ஆனால் மனநோயாளிகளை அவர்கள் இருக்கும் இடங்களுக்கே தேடி ஓடிச் சென்று உணவு, துணி, மணிகளை வழங்குகிறார் இந்த மனித கடவுள். மேலும் கடமைக்கு வெறுமனே உணவினை வழங்கி விட்டு செல்லாமல், ஒரு தாய் குழந்தையை பராமரிப்பதை போன்று தனது கையினால் கள்ளம்கபடமில்லாத மனநோயாளிகளின் வயிறு நிரம்பும்வரை ஊட்டிவிட்டுதான் செல்வார்.

மனித கடவுள்

மனித கடவுள்

மனநோயாளிகளின் குழந்தை தனமான சிரிப்பை கண்டு ஐயப்பனின் மனது தானாக நிரம்பி விடுகிறது. ஒரு கூலி தொழிலாளியின் இந்த உன்னதமான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நாமும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகத்தையும் மக்களுக்கு கொடுத்துள்ளது. சபரிமலையில் குடியிருந்து நம்பிக்கையுடன் வரும் பக்தர்களின் மனக்குமுறலை துடைத்து வருகிறார் ஐயப்ப சாமி. அந்த சாமியின் பெயரையே வைத்திருக்கும் இந்த ஐயப்பன், மனநோயாளிகளின் கண்களுக்கு கண்டிப்பாக சபரிமலை ஐயப்பனாகத்தான் தெரிவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+