போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை.. வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்களை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆறு வழி சாலை மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். இதேபோல பல்லாவரத்திலும் புதிய பாலத்தை அவர் திறந்து வைத்தார்.
கேளம்பாக்கம் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சுமார் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வண்டலூர் மேம்பாலம் கட்டப்பட்டது.
711 மீட்டர் நீளம், 23 மீட்டர் அகலம் கொண்ட ஆறு வழி சாலை மேம்பாலம் இதுவாகும்.
பாலத்தை துவக்கி வைத்தார்
இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, பாலத்தை திறந்து வைத்தார். மேம்பாலத்தில் அரசு பேருந்துகளின் சேவையையும் அப்போது அவர் துவக்கி வைத்தார். வண்டலூர் மேம்பாலம் மூலம் கேளம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று முதல்வர் அப்போது தெரிவித்தார்.
55 கோடி ரூபாய்
மேலும் அவர் கூறுகையில், வண்டலூர் மேம்பாலம் சுமார் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வழிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டத்தில் உள்ள பாலங்கள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன. சில பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பல்லாவரம் மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளேன்.
பல திட்டங்கள்
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலை பாலம், கிழக்கு கடற்கரை சாலை பாலம், ராஜீவ்காந்தி சாலையில் பாலம் கட்ட அடிக்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஆரம்பித்து வைக்க உள்ளேன். ஜிஎஸ்டி சாலை-பல்லாவரம் சாலை சந்திப்பில் புதிய பாலத்தை இன்று துவக்க உள்ளேன். இந்த பாலம் 81 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் மேம்பாலம்
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, முற்றிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும். கொரட்டூர் வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை 29 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 20ம் தேதிக்குள் அந்த பாலம் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
கோயம்பேடு மேம்பாலம்
கோயம்பேடு சந்திப்பு மேம்பாலம் 93.5 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு 75 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. முழு பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதம், மக்கள் பயன்பாட்டுக்கு வரும். வேளச்சேரி-தாம்பரம் பாலத்தின் இடது பக்க பணிகள் டிசம்பர் மாதத்தில் நிறைவடையும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார். இதன்பிறகு பல்லாவரம் பாலம் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.