அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை: ராணுவ கட்டுப்பாடு தேவை... எடப்பாடி பழனிசாமி.. பன்னீர் கூட்டறிக்கை!!
சென்னை: என்னுடைய காலத்திற்குப் பின்னரும் நூறு ஆண்டுகளுக்கு கழகம் ஆட்சியில் அமர்ந்து இருக்கும் என்று தமிழக சட்டசபையில் புரட்சி தலைவி அம்மா சூளுரைத்தார்கள். அம்மா காலத்தில் இருந்ததைப் போல ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூட்டாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே சல சலப்பு நீடித்து வரும் நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் இரண்டு முறை தனித்தனி ஆலோனைக் கூட்டம் நடந்தது.
மூத்த அமைச்சர்கள்
முதல்வர் எடப்படி பழனிச்சாமி தலைமையில் அவரது இல்லத்தில் இன்று காலை தனித்தனியாக ஆலோசனை இரண்டு முறை நடந்தது. மறுபக்கம் துணை முதல்வர் ஓபிஎஸ் இல்லத்திலும் இரண்டு முறை நடந்து முடிந்தது. இதில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கெயில் எரிவாயு குழாய்...வேளாண்மை மண்டலம்...முதல்வருக்கு சீமான் கோரிக்கை!!
முதல்வர் ஓபிஎஸ்
தேனியில் இன்று காலை அதிர்ச்சியை ஏற்படுத்திய போஸ்டர் ''தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓபிஎஸ்'' என்ற போஸ்டர்தான். இது தமிழக அரசியலில் மட்டுமின்றி அதிமுகவிலும் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தப் போஸ்டர் போடி, தேனி, பெரியகுளம் என தேனியின் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டு இருந்தது.
போடி தொகுதி
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி அருகே இருக்கும் கெஞ்சம்பட்டி எனும் கிராம மக்களின் சார்பாக என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த போஸ்டர்களில், 'அம்மா அவர்களின் ஆசி பெற்ற தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஐயா OPS' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தப் போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி புகைப்படமும் சிறிய அளவில் இடம் பெற்று இருந்தது. இந்த போஸ்டரும் இன்றைய ஆலோனைக்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது. பின்னர் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தப் போஸ்டர்கள் நீக்கம் செய்யப்பட்டன.
மூத்த அமைச்சர்கள்
இந்த நிலையில் முதல்வர் எடப்படி பழனிச்சாமி தலைமையில் அவரது இல்லத்தில் தனியாக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மறுபக்கம் துணை முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இந்த சந்திப்புக்குப் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.
அதிமுகவில் சலசலப்பு
இதற்கு முன்னதாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருவரும் அடுத்த முதல்வர் யார் என்பதில் வேறு வேறு கருத்துக்களை கூறி இருந்தனர். செல்லூர் ராஜூ கூறியிருந்த கருத்தையே அமைச்சர் ஜெயக்குமாரும் தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் அடுத்த முறையும் ஆட்சியில் அமருவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்து இருந்தார். ஆனால், இந்த விஷயத்தில் இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைதி காத்து வருகிறார்.
நேர்வழி சென்றால்
அதிமுகவுக்குள் எழுந்த சல சலப்பை அடுத்து துணை முதல்வர் பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பதிவில், ''தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்.
தாய்வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று
நேர்வழி சென்றால்
நாளை நமதே'' என்று தெரிவித்து இருந்தார்.
சசிகலா
தமிழ்நாட்டில் 2021ல் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நிலையில் அரசியலும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக அதிமுகவில் சல சலப்பு அதிகரித்துள்ளது. அதாவது, சிறையில் இருக்கும் சசிகலா எந்த நேரத்திலும் வெளியே வரலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கட்சியை யார் நடத்துவது, அடுத்தது யார் முதல்வர் வேட்பாளர் என்ற முடிவை எட்ட வேண்டிய நிலைமை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதால், நாளைய முடிவும் அவருக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கட்சிக்கு ஓபிஎஸ், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என்று கட்சியில் முன்பு முடிவு செய்ததை தொடர்ந்தால் மட்டுமே எந்தவித இடையூறுகளும் இருக்க வாய்ப்பில்லை. இல்லையென்றால், கட்சி இரண்டாக உடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே பார்க்கப்படுகிறது.
இரட்டை தலைமை
கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை சந்தித்து ஆட்சியை நடத்தி வருபவர் எடப்பாடி பழனிசாமி என்ற பெயர் அவருக்கு கிடைத்துள்ளது. தேர்தலில் அதிமுக வெற்றி பெறுகிறதோ, இல்லையோ ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை எடப்பாடியா, ஓபிஎஸ்ஸா என்ற கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் இரட்டை தலைமை என்ற பெயரை நீக்குவது கடினம். கட்சியிலும் குழப்பம் நீடிக்கும். இந்த் நிலையில்தான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது கூட்டு அறிக்கையாக இருக்கிறது. அவர்களின் தனிப்பட்ட விளக்கங்கள் எதுவும் இல்லை.