எங்கிருந்தும் இனி பட்டா வாங்கலாம்..தமிழ்நிலம் மென்பொருள் சேவை..தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இணையதள வழியில் பட்டா மாறுதலுக்கான தமிழ்நிலம் மென்பொருள் வசதி புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
காணி நிலம் வாங்குவது, பலருக்கு வாழ்வின் லட்சியம். அதில் பத்திரப் பதிவு, பட்டா மாறுதல் எழும் இடையூறுகளை சமாளிப்பது பெரும் சவால்! புதிதாக வாங்கும் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வது ஆன்லைனில் இன்று சுலபமாகியிருக்கிறது. இதற்கு முன்பு வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மற்றொருவருக்கு விற்பனை செய்து பத்திரம் பதிவு செய்யவோ, அந்த சொத்தின் பட்டாவில் இருக்கும் பெயரை மாற்றவோ வி.ஏ.ஓ. அல்லது தாலுகா அலுவலகம் செல்லவேண்டும். அங்குதான் ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை இருந்தது. இதனால் பணம் மற்றும் நேரம் வீணானது.
பொதுமக்களின் இந்த சிரமத்தை தவிர்க்க, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் வசதியை அரசு கொண்டு வந்தது. எனினும் ஆவணங்களை தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
வடகிழக்கு பருவமழை.. வெள்ள பாதிப்பை தடுக்க என்ன செய்யலாம்? செப்.26ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
பட்டா மாறுதல்
தற்போது பத்திரப்பதிவு செய்யும்போது தானாக பட்டா மாறுதல் செய்யும் வசதி அறிமுகமாகியிருக்கிறது. இந்த முறைப்படி, முந்தைய பட்டாவில் சொத்தை விற்பவரின் பெயர் சரியாக உள்ளதா? கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தின் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவை சரியாக உள்ளனவா? என்பதை சரிபார்த்து பதிவேற்றம் செய்ய முடியும். குறிப்பிட்ட பட்டாவை புதிதாக கிரையம் முடிப்பவரின் பெயருக்கு சரியாக மாற்றம் செய்ய முடியும்.
பட்டா மாறுதல் எளிமை
பட்டா மாறுதல் செய்யப்பட்டதும், சொத்தை வாங்கியவர் மற்றும் விற்றவரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். கிரையம் முடித்தவர்கள் http://eservices.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது பட்டா மாறுதல் செய்யப்படும் வசதி மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டா பிரச்சினைக்கு தீர்வு
வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பில்,''அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் இந்த அரசின்கொள்கையின் ஓர் அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022-ம் ஆண்டு பொங்கலுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும் என்று அறிவித்தார்.
தமிழ் நிலம்
இதையடுத்து, நில அளவைத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 1991 முதல் 2002 வரை கிராமங்களில் உள்ள நிலம் தொடர்பான 'அ பதிவேடு', சிட்டா ஆகியவை கணினிமயமாக்கப்பட்டு, கணினிவழி பட்டா 'தமிழ்நிலம்' மென்பொருள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
அனைத்து வசதிகளும் எளிமை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், வருவாய்த் துறை பணிகளை கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம்
நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் (Common Service Centres) மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in /citizen/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
புது மென்பொருள் மூலம்
தமிழ்நாட்டில் நகர்ப்புர நில ஆவணங்கள் 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கணினிப்படுத்தப்பட்டு தமிழ்நிலம் (நகர்ப்புரம்) என்னும் மென்பொருள் மூலம் படிப்படியாக இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கணினிப்படுத்தப்பட்ட பிளாக் வரைபடங்களை, தனித்தனி நகரப் புலங்களுக்கான வரைபடங்களாக என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் இப்புதிய வசதி மூலமாக, பொதுமக்கள் நகர்ப்புர நிலவரைபடங்களை இணையவழியில் கட்டணமின்றி பெறலாம். மேலும், இவ்வரைபடம், மனை அங்கீகாரம் மற்றும் வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியமாக விளங்குவதுடன், பொதுமக்கள், நகரநிலவரைபடம் பெரும்பொருட்டு வட்டாட்சியர் அலுவலகம் வருவது தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் திரு.குமார் ஜெயந்த், இ.ஆ.ப., நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப., மாநில தகவலியல் அலுவலர் திரு. கே. சீனிவாசராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.