கொலைக்குற்றம் செய்தவர்கள் குற்றவாளிகள்தான்... ஏழு தமிழர் விடுதலைக்கு கே.எஸ். அழகிரி எதிர்ப்பு
கொலைக்குற்றம் செய்தவர்களைக் குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
சென்னை: ஓர் நாட்டின் பிரதமரை கொலை செய்த நபர்களை கொலைகாரர்கள் என அழைக்காமல், தமிழர்கள் என அழைப்பது தமிழர் பண்பாடு இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஆளுநர் இதுவரை எந்த பதிலையும் கொடுக்கவில்லை. அதனால் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக அரசியல் கட்சியினர் கோரிக்கை வைக்கக்கூடாது என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீதிமன்றம் முடிவு செய்யட்டும்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்துத் தமிழ் கொலைக் குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.
கொலைக்குற்றவாளிகள்
7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலைக்குற்றம் செய்தவர்களைக் குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.
குற்றவாளிகளை விடுவிக்கலாமா
பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம், காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜீவானந்தம், ராமானுஜம் போன்றவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது. கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும் என்று கூறியுள்ளார் கே.எஸ் அழகிரி.
கே.எஸ் அழகிரி அறிக்கை
ஏழுபேரை விடுவித்தால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என ராகுல் காந்தி முன்பு கூறியருந்தார், அதேபோல 7 பேரை தங்களின் குடும்பம் மன்னித்துவிட்டதாக பிரியங்கா காந்தி ஒருமுறை கூறியிருந்தார். ஏழு பேர் விடுதலை குறித்து அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வரும் இந்த நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.