பெண் வக்கீலிடம் அத்துமீற முயன்ற வாலிபர்.. தலை குப்புற கவிழ்ந்த கார்.. தமிழகத்தை உலுக்கிய கிரைம்கள்
பெண் வக்கீலிடம் அத்துமீற முயன்ற வாலிபர்.. தலை குப்புற கவிழ்ந்த கார்.. தமிழகத்தை உலுக்கிய கிரைம்கள்
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பல குற்றச் செயல்கள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. அந்த குற்றச் சம்பவங்களில் சில முக்கிய விவகாரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
குரோம்பேட்டை மேம்பாலத்தில் மதுபோதையில் காரை ஓட்டிய ஓட்டுநர் முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கார் மேம்பாலத்தின் மீது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குரோம்பேட்டை கக்கலஞ்சாவடியை சேர்ந்த துளசிராமன், தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். தனது இருசக்கர வாகனத்தில் இவர், எம்ஐடி மேம்பாலத்தின் மீது குரோம்பேட்டை நோக்கி செல்லும் போது பின்புறமாக டிராவல்ஸ் கார் ஓன்று வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து லேசான காயமடைந்தார். மோதிய கார் மேம்பாலத்தின் மீது தலைகுப்புற கவிழ்ந்து சாலையின் நடுவே கிடந்தது.
தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கவிழ்ந்து கிடந்த காரை தூக்கி நிறுத்தினர். அதில் கார் ஓட்டுநர் அவரது நண்பர் ஒருவர் இருந்தது தெரியவந்தது. ஓட்டுநர் மதுபோதையில் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா என கண்டறிய, லேசான காயத்துடன் இருந்த ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரை ஆம்புலன்ஸ் மூலமாக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டுநரும் அவரது நண்பரும் தன்னை மறக்கும் அளவிற்கு மதுபோதையில் உள்ளதால் மயக்க நிலை தெளிந்தால் மட்டுமே போக்குவரத்து காவல்துறையினருக்கு அவர்களின் முழுமையான விவரம் குறித்து தெரியவரும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருவள்ளூர் பகுதியில், குடிபோதையில் பெண் வழக்கறிஞரிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் காவல் நண்பர் குழுவை சேர்ந்த சீனிவாசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர். இவர், நேற்று காலை திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் உணவகம் அருகே நின்றுகொண்டிருந்த போது அவ்வழியே வந்த நத்தகோவில்திப்பை ராமன் கோவில் தெருவை சேர்ந்த முன்னாள் காவல்குழுவைச் சேர்ந்த (FOB) சீனிவாசன் என்பவர் குடிபோதையில் தவறாக பேசி தகராறு செய்துள்ளார்.
இதற்கு பெண் வக்கீல், நான் காவல் துறையில் புகார் அளிப்பேன் என தெரிவித்தும், தானும் காவல் துறை மாதிரிதான் என்றும், காவல் துறையில் அனைவரையும் எனக்குத் தெரியும் எனவும் சீனிவாசன் கூறி கலாட்டா செய்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெண் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உடனடியாக சீனிவாசன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஆவடி அருகே தந்தை வாங்கிய கடனுக்காக, வீடு புகுந்து மகனை கடத்திய வழக்கில் கந்து வட்டிக்காரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி, கொள்ளுமேடு, காமராஜர் தெருவை சேர்ந்தவர் மணி (41). இவர், பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சேகர் (21). இதற்கிடையில், கடந்த 8 ஆண்டுக்கு முன்பு, மணி வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக மதுரவாயல் சேர்ந்த சண்முகம் என்பவரிடம், ரூ.4 லட்சம் கடனாக பெற்று உள்ளார். இதற்காக, மணி தொடர்ந்து வட்டி கட்டி வந்து உள்ளாராம். மேலும், கடந்த இரு வருடமாக மணி வட்டியை சரிவர செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் சண்முகம் கொடுத்த கடனை பல மடங்கு வட்டியுடன் திரும்ப கேட்டுள்ளார். மேலும், மணி விரைவில் வாங்கிய கடனை மட்டுமே திரும்ப தருவதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் , கடந்த 27ந்தேதி அதிகாலை சண்முகம் அடியாட்களுடன் மணி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அவர்கள் மணி இல்லாததால், அவரது மகன் சேகரை வீட்டிலிருந்து கடத்தி சென்றுள்ளனர். மேலும், அவர்கள் போகும் போது கடனுடன் வட்டி பணத்தை கொடுத்துவிட்டு, சேகரை அழைத்து செல்லுமாறு வீட்டில் இருந்தவர்களிடம் கூறி சென்று உள்ளனர். பின்னர், மணி சண்முகத்தை சந்தித்து ரூ.2லட்சம் பணத்தை கொடுத்து விட்டு, சேகரை மீட்டு வந்துள்ளார். அப்போது, சேகரை கந்து வட்டி கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் பிறகு, மணி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கு, போலீஸ் தரப்பில் சரியான நடவடிக்கை இல்லை.
இதனையடுத்து மணி, தனது மகன் சேகருடன் சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு கடந்த 28ந்தேதி சென்றார். பின்னர், அங்கு, மணி, தனது மகனுடன் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற உள்ளார். இதனை பார்த்த, அங்கிருந்த காவலர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் பிறகு, உயர் அதிகாரிகள் மணியிடம், "உங்கள் புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்" என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், சேகரை கடத்தி சென்ற கந்து வட்டி கும்பலை சேர்ந்த ஆவடி, பருத்திப்பட்டை சேர்ந்த பாஸ்கர் (33), நெற்குன்றம் ஏரிக்கரை சேர்ந்த ராஜேந்திரன் (45) ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கந்து வட்டிக்காரர் மதுரவாயிலை சேர்ந்த சண்முகம் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
வடமதுரை அருகே உள்ள கோடாங்கிசின்னான்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (45), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய கிணறு அதே பகுதியில் உள்ளது. நேற்று அந்த கிணற்றின் அருகே அவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆடு தவறி 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றுக்குள் விழுந்த ஆடு சத்தம் எழுப்பியதால் ஆட்டை மீட்பதற்காக வடிவேல் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அதன் பின்னர் கயிறு கட்டி ஆட்டை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து வடிவேல் கயிற்றை பிடித்து மேலே ஏறியுள்ளார். பாதி தூரம் ஏறிய போது கயிறு அறுந்ததால் வடிவேல் கிணற்றுக்குள் விழுந்து படுகாயமடைந்தார்.
இதனைக் கண்ட அவரது உறவினர் ராமன் (60) கிணற்றுக்குள் இறங்கி அவரை மீட்க முயற்சி செய்துள்ளார். ஆனால் வடிவேல் காயம் அடைந்ததால் அவரை கிணற்றுக்குள் இருந்து மீட்டுக் கொண்டுவர முடியவில்லை. எனவே இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் போஸ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி காயமடைந்த வடிவேலையும், ராமனையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன் பின்னர் காயமடைந்த வடிவேலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.