ஒரே நேரத்தில் குவிந்த 60 லட்சம் பேர்.. முடங்கிய தமிழக இ-பதிவு வெப்சைட்.. மாலை முதல் செயல்படுகிறது
சென்னை: சுய தொழில் செய்வோர் உட்பட பலரும், இன்று ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் தமிழக இ-பதிவு இணையதளம் இன்று காலை முதல் முடங்கியது. ஒரே நேரத்தில் இன்று 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியதாக அரசு தெரிவித்தது. ஒரு வழியாக மாலை முதல் மீண்டும் இணையதளம் செயல்படுகிறது.
தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து கடந்த இரு வாரங்களாக திறக்கப்படாத மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

சுய தொழில் செய்வோர்
எலக்ட்ரிஷியன் தொழில் செய்வோர், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவா் மற்றும் தச்சா் போன்ற சுயதொழில் செய்பவா்கள் இணையப் பதிவு செய்து விட்டு பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். எலக்ட்ரிக்கல் பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயா்கள் விற்பனைக் கடைகள், சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் செயல்படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இ-பதிவு அவசியம்
வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவு செய்து கொண்டு பயணிக்கலாம். இப்படி இ-பதிவுக்கான தேவைகள் அதிகரித்துள்ளதால் இன்று ஒரே நாளில் இ-பதிவு தளத்தில் மக்கள் குவிந்துவிட்டனர்.

5 பகுதிகளுக்கு இ-பாஸ்
அதுமட்டுமல்லாது, நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும். சுற்றுலா செல்லாமல் அவசர காரணங்களுக்காக மட்டுமே மக்கள் அங்கு செல்ல வேண்டும் என்பதற்காக அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

முடங்கிய இ-பதிவு தளம்
இ-பதிவு மற்றும் இ-பாஸ் என அனைத்து தேவைகளுக்கும் https://eregister.tnega.org/#/user/pass இதுதான் தமிழக அரசின் இணையதள முகவரி. எனவே, ஒரே நேரத்தில் நிறைய பேர் முயற்சி செய்ததால், அந்த வெப்சைட் முடங்கியது. எனவே, மக்களால், அவசர தேவைகளை பூர்த்தி செய்ய இதில் விண்ணப்பிக்க முடியவில்லை. இதனிடையே மதியம், செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஒரே நேரத்தில் இன்று 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது, இன்று மாலைக்குள் சீராகும் என்றார். அதே போல மாலைக்குள் வெப்சைட் சீரடைந்து செயல்பட தொடங்கியது. எனவே மக்கள் இ-பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்












Click it and Unblock the Notifications