குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 தர மாட்டார்கள்.. ஏன் தெரியுமா? "பாயிண்ட்டாக" பேசும் மாஜி அமைச்சர்
சென்னை: பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் தலா 2500 ரூபாய் தர முடியாத தமிழக அரசு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் எப்படி வழங்கும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் அமைச்சரும் அதிமுக சீனியர் தலைவருமான ஜெயக்குமார்.
பொங்கல் திருநாளுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன?
இதன்படி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொருட்கள் விவரம்
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவை இந்த 20 பொருட்களாகும். ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் இது வழங்கப்படுகிறது.
ரொக்கப் பரிசு
இந்த அறிவிப்பின் போது, கடந்த பொங்கலுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வழங்கியது போல 2500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கவில்லை என்று அதிமுக கேள்விக்கணைகளை தொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் இந்த கேள்வியை முன் வைத்திருந்தார்.
ஜெயக்குமார் கேள்வி
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "வருடத்திற்கு ஒரு முறை பொங்கலுக்கு வழங்கப்படும் பணம் கூட தர வழி தெரியாத இயலாமை அரசு மாதம் தோறும் மகளிருக்கு ரூ1000 எப்படி கொடுக்கும்??? விடியா அரசினால் மக்கள் படும் அவதி!!!" இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
திமுக தேர்தல் வாக்குறுதி
இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமாகும். பெண்கள் மத்தியில் இந்த அறிவிப்புக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அரசு அமைந்தவுடன் இதுதொடர்பான அறிவிப்பு வருமா என்று பெண்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
கேள்விகள்
இருப்பினும் அமைச்சர்கள் அவ்வப்போது இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தங்கள் பேட்டியின்போது குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில்தான் வருடத்திற்கு ஒருமுறை பொங்கலுக்கு வழங்க பணம் இல்லாத நிலை இருக்கும்போது மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு எப்படி பணம் தர முடியும் என்ற கேள்வியை அதிமுக முன் வைத்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் பண உதவி என்ற திட்டம் செயல்பாட்டுக்கு வருமா, அல்லது அடுத்த பொதுத் தேர்தல் வரை இழுத்தடிக்கப்படுமா, என்ற கேள்விகளை ஜெயக்குமார் ட்விட்டர் பதிவு ஏற்படுத்தியிருக்கிறது.