தொற்று இல்லாதவர்களுக்கு கொரோனா என தவறான கணக்கீடு.. பிரபல தனியார் நிறுவனத்தின் ஆய்வக அனுமதி ரத்து!
சென்னை: தனியார் ஆய்வகமான மெட் ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை உரிமத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரபல தனியார் ஆய்வகமான மெட்ஆல் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பதாக தவறாக பதிவு செய்து உள்ளதாக மெட் ஆல் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. கடந்த மே 19, மே 20 தேதிகளில் கொரோனா தொற்று இல்லாத 4,000 பேருக்கு தொற்று உறுதி என ஐசிஎம்ஆரில் தவறாக பதிவேற்றம் செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
கொல்கத்தாவில் கொரோனா பாசிடிவ் இருந்தவர்களை கள்ளக்குறிச்சியை சேர்ந்தவராக அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. அதாவது இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாக மெட் ஆல் மீது புகார்கள் வந்தன. இந்த நிலையில் இன்று மெட் ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை உரிமத்தை ரத்து செய்து தமிழக நல்வாழ்வுத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.