யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிரம் காட்டிய, நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பணியிடமாற்றம்
சென்னை: யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக மக்களால் பாராட்டு பெற்ற இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதில் எஸ்.பி.அமரித் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றவர் இன்னசென்ட் திவ்யா.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர் நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

சுற்றுச்சூழல்
மலை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை காப்பதற்கு பெரும் முயற்சிகளை முன்னெடுத்தார். தூய்மை இந்தியா பணிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றில் மும்முரம் காட்டினார். நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்கள் தனியார் ரிசார்ட் மற்றும் கேளிக்கை விடுதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. இதனால் யானைகள் தடம்மாறி வேறு பகுதிகளுக்கு சென்று மக்களோடு மோதும் சூழ்நிலை உருவானது.

யானை வழித்தடங்கள்
யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அதில் கலெக்டர் திவ்யா ஒருவராகும். மிகச் சிறப்பாக பணியாற்றி ஆக்கிரமிப்பாளர்களுக்கு சிம்மசொப்பனமாக மாறினார். இந்த நிலையில் 2019ம் ஆண்டு இன்னசென்ட் திவ்யாவை, பணியிட மாற்றம் செய்ய அப்போதைய அதிமுக அரசு முயற்சி செய்ததை, அறிந்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.

பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை
உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில்தான் திமுக அரசு அமைந்த பிறகு பணியிடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு பணியிட மாற்றம் அவசியம் என்று கூறி உச்ச நீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு.

இன்னசென்ட் திவ்யா மாற்றம்
இதையடுத்து இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய கடந்த 16ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில்தான் நேற்று இரவு தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் அமரித் நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இன்னசென்ட் திவ்யாவிற்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. பொதுவாக மூன்று வருடங்கள் ஒரு மாவட்டத்தில் ஒருவர் கலெக்டராக தொடர்வார். இன்னசென்ட் திவ்யா நான்கரை ஆண்டு காலம் கலெக்டராக தொடர்ந்து இருக்கிறார். ஆனால் இவரது பணியிடமாற்றம் யானைகள் வழித்தடம் மீட்பு விஷயத்தில் பின்னடைவை ஏற்படுத்துமா, அல்லது வழக்கம்போல பணிகள் நடைபெறுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும். மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த ஒரு அதிகாரியை பணி இடமாற்றம் செய்வது, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் நீலகிரி மாவட்ட மக்களால் முன் வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications