கடப்பாரை -இரும்புச்சட்டி -களைக்கொத்து -மண்வெட்டி வாங்க மானியம்! 1 லட்சம் விவசாயிகள் வரை பயன்பெறலாம்!
சென்னை: கடப்பாரை -இரும்புச்சட்டி -களைக்கொத்து -மண்வெட்டி உள்ளிட்ட வேளாண் கருவிகள் வாங்குவதற்கு சிறு குறு விவசாயிகள் ஒரு லட்சம் பேருக்கு மானியம் வழங்கப்படும் என வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.
சிட்டா, PM KISSAN எண் அல்லது உழவர் கடன் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து உங்கள் பகுதி வேளாண்மைத் துறை அலுவலகத்தில் சேர்க்க வேண்டும்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

நோக்கமும் பயனும்
வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு நிறைய நவீன இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்தாலும், அன்றாட சாகுபடிப் பணிகளில் கடப்பாரை, மண்வெட்டி போன்ற கருவிகள் விவசாயிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய வேளாண் கருவிகளை சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் செலவு குறையும் என்பதுடன், அவர்களின் சாகுபடிப் பணியும் எளிதாகிறது.

வேளாண் நிதிநிலை
வேளாண் பெருமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திடும் வகையில், "வேளாண் கருவிகள் தொகுப்பு", 2022-23 ஆண்டிலும் ஒரு லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு 15 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்" என 2022-23 ஆம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

என்னென்ன கருவிகள்?
கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, இரண்டு கதிர்அறுவாள்கள் ஆகிய ஆறு உபகரணங்கள் அடங்கிய "வேளாண் கருவிகள் தொகுப்பு" ஒரு இலட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக தமிழ்நாடு அரசு மாநில நிதியிலிருந்து ரூ.15 கோடி நிதியினை ஒதுக்கி ஆணை வெளியிட்டுள்ளது.

மானியம் எவ்வளவு?
ரூ.3,000/-மதிப்புள்ள வேளாண் கருவிகள் தொகுப்பு 50 சதவிகித மானியத்தில் அதிகபட்சமாக ரூ.1,500/-க்கு வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ரேஷன் கார்டில் உள்ள விபரப்படி, ஒரு வேளாண் குடும்பத்திற்கு ஒரு வேளாண் கருவித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.

யாருக்கு முக்கியத்துவம்
சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உழவர் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உழவர் அட்டை வைத்துள்ள வேளாண் தொழிலாளர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். கிராமங்களில் உள்ள விதவைப்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தினருக்கும் முக்கியத்துவம் தரப்படும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?
வேளாண் கருவித் தொகுப்பை மானியத்தில் வாங்குவதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலமாக தேவையான தகவல்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், www.tnagrisnet.tn.gov.in இணையதளம் மூலமாக, தேவையான தகவல்களை ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்தும், முன்பதிவும் செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, உங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்
விவசாயிகளின் முன்பதிவானது, துறையினால் பரிசீலிக்கப்பட்டு துறை அலுவலர்களிடமிருந்து தகவல் கிடைத்தவுடன், 1) சிட்டா, 2) பண்ணை பயிர் மேலாண்மை அமைப்பு எண் (FCMS) அல்லது பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி அடையாள எண் (PM KISSAN) அல்லது உழவர் கடன் அட்டை (Kisan Credit Card), 3) ரேஷன் அட்டை, 4) ஆதார் அட்டை 5) பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து உங்கள் பகுதி வேளாண்மைத் துறை அலுவலகத்தில் சேர்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications