இரவு நேரங்களில் மின்வெட்டு... ஒரே புழுக்கம்.... கூடவே கொசுக்கடி - தூக்கம் தொலைத்த மக்கள்
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும் 8 மணிநேரம் அளவுக்கு மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழகத்தில் பல ஊர்களில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டினாலும் கொசுக்கடியினாலும், புழுக்கத்தினாலும் மக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். மின் வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி எடுத்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள முள்ளிப்பள்ளம், தென்கரை, மன்னாடிமங்கலம், குருவித்துறை, மேலக்கால், திருவேடகம், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வெட்டு நீடிக்கிறது. திருப்பரங்குன்றம், நிலையூர், ஓம்சக்தி நகரிலும் 4 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு பிரச்சினை நீடித்தது. இரவு நேரங்களில் பலரும் தூக்கம் தொலைத்தனர்.

கொசுக்கடியால் தவிப்பு
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டு வருகின்றது. அதன்படி, கோவில்பாளையம், குரும்பபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், கள்ளிபாளையம் உள்ளிட்ட கோவை புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள புழுக்கம் தாங்க முடியாமல், கொசு கடியில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இரண்டாவது நாளாக மின் வெட்டு
கரூர் மாவட்டத்தில் 2வது நாளாக அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். கரூர் மாவட்டத்தில் மாநகராட்சியை பகுதியை தவிர மற்ற கிராமப் புறங்களில் அய்யர்மலை, மாயனூர், வல்லம் மின் நிலையத்தில் இருந்து வரும் பகுதிகளான சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இரண்டாவது நாளாக மின்வெட்டு ஏற்பட்டதால் இரவு நேரங்களில் புழுக்கம் ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளாகினர்.

பொதுமக்கள் பாதிப்பு
தருமபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கட சமுத்திரம், பூனையானூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடருவதாக புகார் எழுந்துள்ளது. இரவு நேரங்களில் மின் வெட்டு காரணமாக பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Recommended Video

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்
பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். மின் வெட்டு காரணமாக மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்கள் பாடம் படித்தனர். கடந்த சில தினங்களாக நிலவும் இந்த மின் வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கொசுக்கடியாலும் புழுக்கத்தினாலும் மக்கள் தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications