பல இடங்களில் வெளுத்து வாங்கி வரும் மழை.. டவ்-தே புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் போட்ட பதிவு!
சென்னை: அரபிக் கடலில் உருவாகி உள்ள டவ்-தே புயலால் கேரளா முழுவதும் மிக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள ஏராளமான ஊர்களில் 100 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் 144 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது,
இதன் காரணமாக கேரளாவில் மிக கனமழை வெளுத்து வருகிறது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா மற்றும் கொல்லம் ஆகியவற்றில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் நகரும் போது
வடக்கு நோக்கி நகரும் டவ்-தே புயல் கேரளாவில் இல்லை என்றாலும், குஜராத் கடற்கரையை நோக்கி நகரும்போது கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதனால் கேரளா, கர்நாடாக, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்படுகிறது

மிககனமழை பெய்யும்
தற்போதைய நிலையில் அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் கர்நாடகா கரையோரத்தில் இருந்து 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு சுழன்று வருகிறது. கர்நாடகாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக மிக கனமழை வரை பல இடங்களில் செய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இது 118-165 கி.மீ வேகத்தில் காற்று வேகத்தை செலுத்தக்கூடிய கடுமையான சூறாவளி புயல் என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், லட்சத்தீவு, கேரளா, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், தெற்கு, உள் கர்நாடகா மாவட்டங்கள், தெற்கு கொங்கன் பகுதிகள் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

கேரளாவில் மழை
மழை காலத்தில் அதிகப்படியான பதிவுகள் போட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இந்த முறை அதிக பதிவுகளை வெளியிடவில்லை. அதேநேரம் கேரளாவின் பல இடங்களில் 100 மில்லி மீட்டர் மழை பெய்ததையும், தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள திருவட்டாரில் 144 மில்லி மீட்டர் மழை பெய்ததையும் பதிவிட்டுள்ளார்.

பிரதீப்ஜான்
வெதர்மேன் பிரதீப் ஜான் புயல் குறித்து அதிகம் பதிவிடாதது குறித்து கூறுகையில், இதை பற்றி சொல்ல வேண்டும் என்றால், மழையைப் பற்றி மனதில் எழுத நிறைய இருக்கிறது, ஆனால் அதை பதிவிட முடியவில்லை. சுற்றி நடக்கும் பாதிப்புகளால் (கொரோனா பாதிப்புகள்) என்னால் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார். கடந்த 3 நாட்களின் மழைப்பொழிவைத் தொகுக்க நிறைய நேரம் எடுத்தது என்றும் கூறியுள்ளார். டவ் தே புயலால் தமிழகத்தின் கோவை, பொள்ளாச்சி உள்பட பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று கூறியிருந்தார். அதன்படி மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications