தேர்தல் வியூகத்தில் தீவிரம் காட்டும் விஜய்! தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது!
சென்னை: எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் வியூகம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. விஜய் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக அரசியல் பேசும் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த விஜய், ஒருவழியாக கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். சமத்துவத்தையும், சகோதாரத்துவத்தையும் தனது கொள்கைகளாக அறிவித்த விஜய், நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும், சட்டமன்ற தேர்தலில்தான் போட்டி என்றும் அறிவித்தார். இதனையடுத்து அவரது கட்சியின் முதல் மாநாடு விழுப்புரத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.

திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளை கொள்கை எதிரியாகவும் விஜய் அறிவித்திருந்தார். இதனையடுத்து அவரது அரசியல் நடவடிக்கைகள் சில கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. தொண்டர்களை நேரில் சந்தித்து அரசியல் பேசாமல் இருப்பது, முக்கியமான விஷயங்களில் போராட்ட களத்திற்கு வராமல், சோஷியல் மீடியாவில் கண்டன அறிக்கை விடுத்து கடந்து போவது என விஜய் தொடங்குவதற்கு முன்னரே விமர்சனங்கள பலவற்றை எதிர்கொண்டார்.
இப்படியே போனால் வேலைக்கு ஆகாது, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது என்பதை உணர்ந்த நிர்வாகிகள், கள அரசியலுக்கு வர விஜய்க்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினர். இந்த அழுத்தம், அவரை களத்திற்கு கொண்டு வந்தது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 900 நாட்களுக்கும் மேல் போராடி வரும் மக்களை அவர் சில நாட்களுக்கு முன்னர் நேரில் சென்று சந்தித்தார். ஆனால் அதிலும் கூட சில சலசலப்புகள் எழுந்தன. மண்டபத்தில் கிரம மக்கள் விஜய்க்காக காத்திருந்தனர். ஆனால் அவரோ, மண்டபத்தின் வாசலில் கூடியிருந்த தனது ரசிகர்கள் மத்தியில் பேசிவிட்டு சென்றுவிட்டார்.
இப்படி இருக்கையில்தான் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை விஜய் கூட்டுவதாக அறிவித்திருக்கிறார். 2026 தேர்தலுக்கு குறைந்த காலமே இருக்கும் நிலையில், மேலும் கள அரசியல் பணிகளை தீவிரப்படுத்த விஜய் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வேங்கைவயலுக்கு விஜய் செல்ல உள்ளதாகவும், இது குறித்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
பல மாதங்கள் ஆகியும் குடிநீர் தொட்டியில் யார் மலம் கலந்தது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே, இதில் விஜய் கவனம் செலுத்த இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. எனவே நாளை நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று, அடுத்த கட்ட அரசியல் திட்டம் குறித்து பேசுவார். அவர் என்ன பேசுவார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications