டெல்லிக்கு சென்றாலே இடமாறுதலா?.. ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி!
சென்னை: டெல்லி சென்றாலே இடமாறுதலா என கேள்வி எழுப்பிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசைக்கு அந்த மாநில முதல்வரான சந்திரசேகர ராவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. தமிழிசையின் தாய் இறப்புக்குக் கூட தன்னிடம் கேசிஆர் துக்கம் விசாரிக்கவில்லை என மிகவும் வேதனையுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தமிழிசை சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்து தமிழிசையை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓயாத சர்ச்சை.. கேசிஆருடன் முற்றிய பஞ்சாயத்து! டெல்லியில் முறையிட்ட தமிழிசை! பரபர தெலுங்கானா!
ஆளுநர் தமிழிசை
இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை அளித்த பேட்டியில் தன்னை விட திறமை உள்ளவராக போட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். நான் சவால் விடுகிறேன். பெண் என்றால் சாதிக்க முடியாதா? என்னை விட யார் திறமையாக செயல்பட முடியும். இரண்டு மாநில ஆளுநர் பணியை எந்த இடத்திலும் குறைவைத்தது இல்லை.
பாக்கியசாலி
நான் ஒரு பாக்கியசாலி. இத்தனை அன்பு எனக்கு கிடைத்துள்ளது. மக்களிடம் அதிகமாக செல்கிறார் என்பதால் சில நேரங்களில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அரசியல்வாதியாக இருக்கும் போது விமர்சனம் வருகிறது. ஆளுநராக இருக்கும் போதும் விமர்சனம் வருகிறது. சும்மா டெல்லி சென்றால் அதற்குள் என்னை இடமாறுதல் செய்ய போவதாக சொல்கிறார்கள்.
தெலுங்கானாவில் ஆளுநர்
தெலுங்கானாவில் ஆளுநராக பணியாற்றுவது சாதாரண விஷயமல்ல. அங்கேயே பணி செய்துவிட்டேன். அதனால் எங்கு சென்றாலும் பணியை செய்வேன் என்றார். ஆளுநரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது தொடர்பாக தமிழிசை கூறுகையில் அழைப்பு வந்தால் மரியாதை கொடுங்கள்.
பெரியவர்களா தாழ்ந்தவர்களா
வேண்டாம் வர மாட்டேன் என்று கூறினால் பெரியவர்களா, அல்லது மதித்து வந்தால் அவர்கள் தாழ்ந்தவர்களா? ஆளுநரும் முதல்வரும் மனகசப்பு இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணம். முதல்வர், ஆளுநர் ஒன்றாக இல்லை என்றால் எப்படியிருக்கும் என்பதற்கு தெலுங்கானா ஒரு உதாரணம். அரசியல்வாதியாக இருந்தபோதும் விமர்சனம் வருவதாகவும், ஆளுநராக இருக்கும்போதும் விமர்சனம் வருவதாகவும் தமிழிசை தெரிவித்திருந்தார்.