அன்பான தொண்டர்கள்.. அப்பாவை விட்டுக்கொடுக்க வேண்டிய ரணம்.. உணர்ச்சி வசப்பட்ட தமிழிசை
Recommended Video
சென்னை: பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் உழைப்புக்கு மரியாதை கொடுப்பார்கள் என்பதற்கு என்னை முன்னுதாரப்படுத்தி இருக்கிறார்கள் என்று தெலுங்கானா மாநில ஆளுநராகும் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும் போது கூறியதாவது:
"என் மீது நம்பிக்கை கொண்டு இந்த பொறுப்பை அளித்திருக்கிறார்கள். இதுக்கு உறுதுணையாக இருந்த உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு நன்றி. இதேபோல் என்னை ஊக்கப்படுத்திய பாஜக தேசிய செயல் தலைவர் ஜேபி நட்டாவுக்கு நன்றி.
குமரிஅனந்தன் குடும்பத்திற்கு காங்கிரஸ் அளிக்காத கௌவரத்தை அளித்த பாஜக
பாஜக தொண்டர்களுக்கு நன்றி
என் மீது அன்புகாட்டி உறுதுணையாக இருந்த முரளிதர்ராவ்வுக்கும், சந்தோஷ்ஜிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் மாநில தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அன்பான பாஜக தொண்டர்களுக்கு நன்றி. தமிழ் மக்களுக்கும் என் பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
நான் எதிர்பார்க்காத உயர்வு
இந்த வயதில் இத்தகைய உயர்வு நான் எதிர்பார்க்காத ஒன்று. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் உழைப்புக்கு மரியாதை கொடுப்பார்கள் என்பதற்கு என்னை முன்னுதாரணப்படுத்தி இருக்கிறார்கள் என்று தான் நான் சொல்வேன். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததில் இருந்து உழைப்பை தவிர வேறு எதையும் கட்சிக்கு செய்ததில்லை.
அந்த மக்களுக்காக பணியாற்றுவேன்
கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து, கடுமையாக உழைத்து கட்சியின் மாநில தலைவராக வளர்ந்த என்னை இன்று ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமித்து இருக்கிறார்கள் என்றால் அது நான் செய்த மிகப்பெரிய பாக்கியம். தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களில் ஒருவராக வளர்ந்து ஒரு கட்சித்தலைவியாக இருந்து இன்று இன்னொரு மாநிலத்திற்கு ஆளுநராக செல்கிறேன். தமிழக மக்களுக்கு வாழ்நாள் சேவை இருக்கும். அதேபோல் என்னை எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமித்து இருக்கிறார்களோ அந்த மாநிலத்திற்கு எந்தெந்த வகையில் எனது சேவையை செய்ய முடியுமோ அதை செய்வேன். தமிழில் இருந்து சுந்தர தெலுங்கானாவிற்கு செல்கிறேன். எங்கே இருந்தாலும் நான் தமிழ் தமிழிசை தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
நான் கடமையாக வைத்துள்ளேன்
என்னை பொறுத்தவரை எல்லோரிடமும் எளிமையாக பழகக்கூடிய தன்மையை நான் எந்த உயரத்திற்கு சென்றாலும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை என் வாழ்நாளில் ஒரு கடமையாகவே வைத்திருக்கிறேன். எல்லோரும் அணுகக்கூடிய சகோதரியாகவும், எல்லோருக்கும் இயன்ற உதவியை செய்யக்கூடியவளாகவும் தான் என் வாழ்க்கை இருக்கும்.
நான் உங்களின் தங்ககை
நான் தெலுங்கானாவுக்கு தான் ஆளுநர். அண்ணன்களுக்கு தங்கச்சி. தம்பிகளுக்கு அக்கா. நான் சகோதரி என்பதை பதிவு செய்கிறேன். அரசியல் தொடர்பான எந்த கேள்விக்கும் இனி நான் பதில் சொல்ல மாட்டேன்.
பாஜகவை தேர்வு செய்தேன்
காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து அப்பா ஒரு தூய்மையான அரசியல்வாதியாக இருந்த காலக்கட்டத்தில் ஒரு மாணவியாக இருந்த நான் முற்றிலுமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவை தேர்ந்தெடுத்தேன். காங்கிரஸ் கட்சியின் தலைவராக வளர்ந்த நான் அதிலிருந்து விடுபட்டு பாஜகவில் இணைந்து அதில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தது தான் என் வாழ்வில் மிகப்பெரிய சவால்.
அன்பான தொண்டர்கள்
அன்பான தொண்டர்களுக்காக அப்பாவை விட்டுக்கொடுக்க வேண்டிய ரணமான விஷயம். இன்று என் தந்தையே இந்த பாதையை தேர்ந்தெடுத்ததற்காக மகிழ்வார்கள். அதனால் நான் இன்னும் அவர்களை பார்க்கவில்லை. நான் முதலில் செய்தி வந்தஉடனேயே வரவேண்டும் என்று நினைத்து பாஜகவின் அலுவலகமான கமலாலயம். கமலாலயம் என்பதற்கு தாமரையின் கோயில் இது. இதில் ஒவ்வொரு துகளிலும் தமிழிசையின் உணர்வு இருக்கும்" இவ்வாறு கூறினார்.