ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா.. அமைச்சர் ரகுபதியே ஒப்புக் கொண்டாரே.. பாயிண்டை பிடித்த அண்ணாமலை
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்பதை அமைச்சர் ரகுபதியே ஒப்புக் கொண்டார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் கடனை வாங்கி அதில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லை தாளாமல் பலர் தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் நிலை உள்ளது. இதையடுத்து இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழக அரசு சார்பாக அவசர சட்டம் இயற்றப்பட்டது.
இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பரிசீலித்து ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு அந்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 ஐ சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது.
ஆன்லைன் ரம்மியில் பணம் கொள்ளை.. ஆளுநரை சந்தித்த அமைச்சர் ரகுபதி விளக்கம்..உயிர்கள் காப்பாற்றப்படுமா?
ஆன்லைன் ரம்மி தடை சட்டம்
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவில் குறிப்பிட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பாக அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என கேட்கப்பட்டது. இந்த நிலையில்தான் அந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அவசர சட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலாவதியானது.
ஆன்லைன் தடை மசோதா
இந்த நிலையில் ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஒப்புதல் கொடுப்பது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆன்லைன் தடை மசோதா பரிசோதனையில் இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.
ஆளுநர் ரவி
ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளது. அந்த மசோதா குறித்து சில சந்தேகங்கள் உள்ளது. அதனை தெளிவுப்படுத்திக் கொண்டு ஒப்புதல் தருவதாகவும் கூறினார். 25 உயிர்கள் பலியானதற்கு காரணமாக இருக்கும் ஆன்லைன் சூதாட்ட ரம்மியை தடை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
அமைச்சர் ரகுபதி
இந்த நிலையில் அமைச்சர் ரகுபதியின் பேட்டி வீடியோவை பகிர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான திரு ரகுபதி அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
அவசர சட்டம்
அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.
திமுக அரசு
ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.