குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ரேஷன் கார்டில் பெயர் மாற்ற வேண்டாம்-பிடிஆர்
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையை பெற பெயர் மாற்றம் செய்ய தேவையில்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே என்பதை திமுக அரசு இந்த பட்ஜெட்டில் தற்போது தெளிவுப்படுத்திவிட்டது.
Recommended Video
திமுகவின் தேர்தல் அறிக்கைகளில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது இல்லத்தரசிகளுக்கான ரூ 100- உரிமைத் தொகையாகும். தங்களது ஒவ்வொரு செலவுக்கும் கணவரையோ மகனையோ அல்லது வேறு யாரையேனும் எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களை கவுரவிக்க மாதந்தோறும் ரூ 1000 உரிமை தொகை வழங்கப்படும் என திமுக வாக்குறுதியாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் இந்த திட்டத்தை தொடங்கவில்லை என அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட அம்சங்களை உடனடியாக நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டமும் நடத்தியது.

ரேஷன் அட்டை
இந்த நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டத்தை பெற ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் அரிசி அட்டைக்காரர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் வழங்கப்படும் என பல்வேறு தவறான கருத்துகள் உலா வந்தன. இதனால் நிறைய இல்லதரசிகள் தங்கள் பெயரை ரேஷன் அட்டையில் மாற்றுமாறு அலுவலகங்களில் விண்ணப்பித்திருந்தனர்.

ஏராளமான விண்ணப்பங்கள்
உணவு வழங்கல் துறையில் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் 2021- 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனால் இன்றைய தினம் பெண்களுக்கான ரூ 1000 திட்டம் குறித்து நிச்சயம் அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

உரிமைத் தொகை
அந்த வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் இந்த திட்டத்தின் நோக்கமே இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்கவேதான். அதிலும் ஏழ்மையானவர்களுக்கான திட்டம் இதுவாகும். இதற்காக யாரும் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை. இந்த திட்டத்திற்கான தகுதிவாய்ந்த பயனாளிகள் கண்டறியப்படுவர். விரைவில் திட்டம் அமல்படுத்தப்படும் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

குடும்பத் தலைவி
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை என பொத்தம் பொதுவாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த உரிமைத் தொகை மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு என அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற ரூ2756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications