இந்துத்துவா முன் மண்டியிடாத, மோடிக்கு பயப்படாத ஒரே முதல்வர் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்': ஆ.ராசா
சென்னை: இந்துத்துவா சக்திகளுக்கு முன்பாக இந்திய துணைக் கண்டனத்தின் பல மாநிலங்களின் முதல்வர்கள் மண்டியிட்டுள்ளனர்; ஆனால் இந்துத்துவா முன்பாக மண்டியிடாத, மோடிக்கு பயப்படாத ஒரே சிங்கம் சென்னையில் இருக்கிறது.. அவர்தான் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என திமுக மூத்த தலைவர் ஆ.ராசா எம்பி கூறினார். மேலும் மோடியை எதிர்த்து பேசுவதால் எத்தனை ரெய்டுகள் வந்தாலும் அச்சப்படாமல் எதிர்கொள்ள நாங்கள் தயார் என்றும் ஆ.ராசா எம்.பி. ஆவேசமாக கூறினார்.
சென்னை மதுரவாயல் வடக்கு தி.மு.க சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நொளம்பூரில் நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்பி பேசியதாவது: தமிழகம் சாதி,மதம் கடந்து வருவதற்கு திராவிட மாடல் ஆட்சி காரணம். இதற்காக பாடுபட்டவர்களில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியருக்கு பெரும் பங்கு உண்டு. வர்ணாசிர தர்மத்தைப் பேசுகிற சமஸ்கிருத மொழியை வளர்க்க ரூ 300 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற தமிழ் மொழிக்கு வெறும் ரூ2 கோடிதான் ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசு.
மத்திய அரசானது, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளுக்கு மொத்தமே ரூபாய் 20 கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கிறது. பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீட்டை கொடுகிறோம் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜாதிவாரியான ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யப் போகிறது மத்திய அரசு. நம்மை குலத்தொழிலுக்கே திருப்பி அனுப்பப் போகிறது மத்திய பாஜக அரசு.
திமுக இளைஞரணியை வேகப்படுத்த ஆ.ராசா.. ஸ்டாலின் 'சக்கர வியூகம்’.. நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்பு!?
இந்துத்துவாவின் ரெய்டுக்கு பயந்துவிட்டார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. அதேபோல மாயாவதியும் அமைதி காக்கிறார். ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் ரெய்டுகளால் எதுவும் பேசுவது இல்லை. ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கும் ரெய்டுகளால் அமைதியாக இருக்கிறார். இந்தியாவில் எந்த தலைவரும் இந்துத்துவாவை, மோடியை எதிர்ப்பது இல்லை. ஆனால் இந்துத்துவா சக்திகள் முன்பாக மண்டியிடாத, மோடிக்கு பயப்படாத ஒரு சிங்கமாக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறார். அவரது செனடாப் சாலை இல்லம்தான் அடுத்த பிரதமரை, அடுத்த அமைச்சரவையை தீர்மானிக்கப் போகிறது.
மோடியை, இந்துத்துவா சக்திகளை எதிர்த்து பேசுவதால் என் மீது ரெய்டு ஏவிவிடுகிறார்கள். எத்தனை முறை ஒரே நிறுவனம், ஒரே சொத்து மீது சோதனை நடத்துவார்களோ? செத்த பிணத்தின் மீது எத்தனை முறை வண்டியை ஏற்றுவார்களோ? இதற்கு எல்லாம் அச்சப்படுகிறவர்கள் திமுகவினர் அல்ல.. திமுக என்ற பெயரை, கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் பெயரை சொல்கிற தொண்டன் இத்தகைய சோதனைகள், ரெய்டுகளுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதும் இல்லை. இவ்வாறு ஆ.ராசா கூறினார்.