உதயசூரியனை வணங்கி.. சாதி, மதம் கடந்து பொங்கல் கொண்டாடுவோம் -பட்டு வேட்டி சட்டையில் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை, துண்டு அணிந்து பொங்கல் வாழ்த்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அவர், "தாய்த் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் திருநாள் இது. பொங்கல் திருநாள் இது.
உழவர் திருநாள் இது. உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள்.

கற்பனை கதைகள் இல்லை
மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த வேட்டைச் சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு மற்ற உயிரினங்கள், இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா. கற்பனை கதைகள் இல்லாத பண்பாட்டுப் பெருவிழா.

உதய சூரியனை வணங்கி
வானம் பொழிந்தது, பூமி செழித்தது என்று அல்லாமல், வானம் கொடுத்தது, பூமி பெற்றது என்ற அன்பான உறவை நிலத்தின் மீது நின்று வான் நோக்கி கரம் குவித்து உதயசூரியனை வணங்குவதன் மூலமாக உலகுக்கு நாம் உணர்த்துகிறோம். புதுப்பானையில் புத்தரிசி போட்டு, புத்தொளி ஊட்டி, உள்ளங்களில் பொங்கும் உணர்ச்சியால் அடுப்புமூட்டி, பானைக்கு மேலே வழிந்தோடும் அன்பு நுறையானது நாடு முழுக்க அனைவர் வீடுகளிலும் பரவ வேண்டும் என விரும்புகிறேன்.

தமிழர் மாதம் தை
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதனால்தான் இந்த தை மாதத்தை தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் மாதமாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினம், இலக்கியத் திருவிழா, கலைத் திருவிழா, நம்ம ஊரு திருவிழா, ஏறு தழுவுதல் இப்படி தை மாதம் முழுக்கவே தமிழ் மாதமாகவே, தமிழர் மாதமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.

சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடுவோம்
ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மத வேறுபாடுகள், சாதிய பாகுபாடுகள் இவை எவையும் இல்லாமல் தமிழர் அனைவரும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் சமுத்துவ பெருவிழாதான் பொங்கல் விழா. துன்பங்கள் துடைக்கப்பட்டு இன்பம் பொங்கட்டும். வருத்தங்கள் போக்கி மகிழ்ச்சி பொங்கட்டும். வேறுபாடுகள் களைந்து ஒற்றுமை பொங்கட்டும். மாறுபாடுகள் விலகி சமதர்மம் பொங்கட்டும்.
|
உழைப்பாளியை வணங்குவோம்
உழைப்பை வணங்குவோம். உழைப்பவரை வணங்குவோம். வேளாண்மையை வணங்குவோம். விளைவிக்கும் உழவரை வணங்குவோம். மனிதர்களுடன் சேர்த்து பல்லுயிரையும் வணங்குவோம். மண்ணை வணங்குவோம். மண்ணின் வளத்தை எந்நாளும் காப்போன். இயற்கையை வணங்குவோம். இயற்கை மனிதர்களாக எந்நாளும் நடப்போம். தாய் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும். அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications