நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரி.. மதத்திற்கு இல்லை! அறநிலையத்துறை நிகழ்ச்சியில் முதல்வர் பன்ச்
சென்னை: தமிழ்நாடு முழுக்க அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 2,500 கோயில்களுக்குத் திருப்பணி மேற்கொள்ள ரூ. 50 கோடி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை.. மதவாதிகளுக்கு மட்டுமே எதிரானவர்கள் என்று பேசினார்.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பல ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் 2,500 கோயில்களுக்குத் திருப்பணி மேற்கொள்ள ரூ. 50 கோடி நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.
அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், கோயில்களுக்குத் திருப்பணி மேற்கொள்ள ரூ. 50 கோடி நிதி வழங்கினார்.
தென்பாண்டித் தமிழே! என் சிங்கார குயிலே! பாசத் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தாங்கள் மதவாதத்திற்குத் தான் எதிரி என்றும் மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், மேலும், மதம், சாதி, கோயில், சாமி என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகள்
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 640க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். அதாவது கடந்தாண்டில் 8550 கிமீ மேல் நான் சுற்றி வந்துள்ளேன். இதன் மூலம் மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ள உதவிகள் மூலம் 1.03 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுக்க பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன் பெற்றவர்கள் இவர்கள். கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இதை நான் விரிவாகப் பேசியிருந்தேன்.
அறநிலையத்துறை
துறை ரீதியாகப் பார்த்தால்.. எனது பொறுப்பில் இருக்கும் உள் துறை சார்ந்த 32 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். அடுத்த தொழில்துறை.. இதில் 30 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். அதற்கு அடுத்து அதிகபட்சமாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தான் நான் அதிகம் கலந்து கொண்டுள்ளேன். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் கடந்தாண்டில் மட்டும் 28இல் நான் கலந்து கொண்டுள்ளேன். இதற்காக நாம் அமைச்சர் சேகர்பாபுவை பாராட்ட வேண்டும். மூன்றாவது இடத்தில் இருக்கிறோம் என்பதற்காக அவர் இனிமேல் ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிகளை நடத்திவிடக் கூடாது.
மதத்திற்கு எதிரி இல்லை
அனைத்து துறைகளும் வளர்வது தான் திராவிட மாடல் ஆட்சி என்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் தான் திராவிட மாடல் ஆட்சி.. திராவிட மாடலை பிடிக்காத சிலர் எங்களை மதத்திற்கு விரோதிகள் என்பது போலச் சித்தரிக்க முயல்கிறார்கள். உண்மையில் நாங்கள் மதவாதத்திற்குத் தான் எதிரிகள். எந்தவொரு மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை. இந்த நிகழ்ச்சி மூலம் நாங்கள் சொல்வது அதைத்தான். இதை அவர்கள் உணர வேண்டும். 2500 கிராம கோயில்களுக்கு பணிகளுக்கு 50 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதைத் தமிழ்நாட்டில் முக்கிய ஆன்மீக பெரியவர்களான ஆதீனங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அறநிலையத்துறை
தமிழக அரசு சார்பில் திருக்கோயில்களுக்குத் தொடர்ந்து பல திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காகத் தனியாக ஒரு வல்லுநர் குழுவை அமைத்து அவர்கள் ஆலோசனைப்படியே திருப்பணிகளைச் செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை சார்பில் 43000 கோயில்கள் உள்ளன. இதில் பழமையான கோயில்களைப் புதுப்பிக்கவும் குடமுழுக்கு விழாக்களை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் பல நவீன அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு ஒப்புதல் பிறகே இந்த பணிகள் செய்யப்பட்டு வருகிறது. 3986 கோயில்களில் திருப்பணி செய்ய இந்த வல்லுநர் குழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மானிய கோரிக்கை
1000 ஆண்டுகள் பழமையான 112 கோயில்களைப் பழமை மாறாமல் சீரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் பழமையான கோயிலைப் பாதுகாக்க ஆலோசகர் தந்த ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் சேகர்பாபு ஏராளமான அறிவிப்புகளை அறிவித்தார். 2021-22 நிதியாண்டில் மொத்தம் 112 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 91 அறிவிப்புகள் மூலம் 3700 கோயில்களில் திருப்பணிகளும் மேம்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது.
திராவிட மாடல்
அடுத்து 2022-23 நிதியாண்டிற்கான மொத்தம் 165 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 135 அறிவிப்புகள் மூலம் 2500க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகளும் மேம்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்காக அவரையும் அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன். அந்த கூட்டத்தொடரில் அறிவிக்காத அறிவிப்பு தான் இது. இப்படிச் சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்யும் ஆட்சியாகத் திராவிட மாடல் ஆட்சி உள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் 5078 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
புதிய திட்டங்கள்
திருவாரூரில் பல ஆண்டுகள் ஓடாத தேரை ஓட வைத்த பெருமை கருணாநிதியையே சேரும். தேர் செல்லும் பாதைகளில் சாலைகள் அமைக்கப்பட்டன. அப்போது கருணாநிதி சொன்னார். தேர் சில நாட்கள் மட்டுமே ஓடப்போகிறது. ஆனால், இந்த சாலைகளை மக்கள் ஆண்டு முழுவதும் பயன்படுத்துவார்கள். நமது கலை, சிற்பங்களுக்கு அடையாளமாக உள்ள கோயில்களைக் காப்பது அரசின் கடமை என்று எண்ணிச் செயல்பட்டு வருகிறோம். எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது. இதற்காகத் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம்.
பாராட்டு
அனைத்து கோயில்களுக்கும் உதவி செய்து வருகிறோம். மதம், சாதி, கோயில், சாமி என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.. இதன் காரணமாகவே அனைவரும் இந்த அரசை பாராட்டுகிறார்கள். இன்று நம்மை ஏளனம் செய்யும் நபர்களுக்கு இந்த மேடையே பதிலாக இருக்கும். எல்லாருக்கும் எல்லாம் என்பது கிடைக்கும் வரை அனைவருக்காகவும் உழைப்போம்" என்று அவர் தெரிவித்தார்.