2 ஆண்டுகள் ஆச்சு.. மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தை உடனடியாக தொடங்குங்கள்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
கடந்த 2015ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இதற்காகக் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார்.
அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2.5 ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலிலும்கூட எய்ம்ஸ் தொடர்பான பிரசாரத்தை திமுக முன் வைத்தது. அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி, எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார்.
இந்நிலையில். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு, சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்குப் பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென்றும் கோரி, பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்" என அதில் கூறப்பட்டுள்ளது.